கோவை அருகே வனத்துறை அனுமதியின்றி தனியார் நிலத்தில் தேக்கு மரங்களை வெட்டிக்கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை புதூர் அருகே பட்டா நிலத்தில் இருந்த தேக்கு மரங்களை அனுமதியின்றி வெட்டி லாரியில் கடத்திச்செல்வதாக நேற்றிரவு ஓசை தொண்டு அமைப்பினருக்கும், மதுக்கரை வனத்துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் வனச்சரகர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்றார்.அப்போது, மருத்துவர் ஒருவருக்கு சொந்தமான நிலத்தில் இருந்த 12-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்களை வெட்டி லாரியில் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதனை அடுத்து, அந்த லாரியை துரத்திச்சென்ற ஓசை அமைப்பினர் சிங்காநல்லூர் அருகே அதனை மடக்கிப்பிடித்தனர்.
அப்போது, லாரியில் இருந்து ஓட்டுநர் உள்ளிட்ட 2 பேர் தப்பியோடினர். தொடர்ந்து, வனத்துறை அதிகாரிகள் தேக்கு மரங்கள் கடத்திய லாரியை அதிரடியாக பறிமுதல் செய்து, மதுக்கரை வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர்.
தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விவசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மேட்டுப்பாளையம் காட்டுராஜா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இவர் மீது ஏற்கனவே நீலகிரி மாவட்டத்தில் மரங்களை கடத்தியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்ததும் தெரியவந்தது.
இதனை அடுத்து, தப்பியோடிய காட்டுராஜா உள்ளிட்ட 2 பேரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.