மூலிகையின் பெயர் -: இண்டு.
- தாவரப் பெயர் -: ACACIA CAESIA.
- தாவரக்குடும்பம் -: MIMOSACEAE.
- பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, மற்றும் வேர் முதலியன.
இண்டு, தமிழ் நாட்டில் சிறு காடுகளிலும், வேலிகளிலும் தானே வளர்வது. வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது. முதன் முதலில் இந்தோ மலேசியா மற்றும் தாய்வானில் தோன்றியது.
சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூறிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கொடி. பருவத்தில் காலையில் சிறு சிறு பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூப் போல் பூக்கும். பட்டையான காய்களையுடையது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.
மீள முடியாத பிரச்னைகளில் சிக்கித்தவிக்கும் கிராமப்புற மக்கள், ‘இண்ட முள்ல தலைய விட்டாப்ல…’ என்று ஒரு சொலவடையைச் சொல்வார்கள். காரணம், இண்டு முள்ளில் தலையைவிட்டால் எடுக்க முடியாது. அப்படிப்பட்ட மீள முடியாத அல்லது தப்ப முடியாத புதர்க்கொடியான இண்டு முள்ளைத்தான் சிறந்த உயிர்வேலித் தாவரமாக நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.
இண்டு வேலியைக் கண்டு புலிகூட நடுங்குவதால், ‘புலித்துடக்கி’ என்ற பெயரும் இதற்கு உண்டு. சங்க இலக்கியங்கள் இண்டு தாவரத்தை ‘ஈங்கை’ என்றே குறிப்பிடுகின்றன.
இன்றளவும் குமரி மாவட்டத்தில் இது ஈங்கை’ என்றே அழைக்கப்படுகிறது.
இண்டு’, ஈங்கை’,
ஈயக்கொழுந்து’ எனப் பல பெயர்களிலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இண்டுவில் வெள்ளிண்டு’,
சிவப்பிண்டு’ என இரு வகைகள் உள்ளன. வெள்ளிண்டுதான் மருத்துவத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இண்டு கோழையகற்றுதல், நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.
விரல் பருமனுள்ள இண்டந்தண்டுகளை 4-6 இன்ச் அளவு துண்டுகளாக்கி, ஒரு முனையை வாயில்வைத்து பலூன் ஊதுவதுபோல் ஊத… மறுமுனையில் நீர்க்குமிழிபோல் தண்ணீர் கொட்டும். இவ்வாறு சேகரிக்கப்பட்ட மூலிகைத் தண்ணீர் 15 மி.லி-யுடன், அரை கிராம் திப்பிலிப்பொடியைச் சேர்த்து உண்டுவர எந்த மருந்திலும் தீராத இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பு குணமாகும். இதையே குழந்தைகளுக்கு 5 மி.லி வீதம் கொடுத்துவர நாள்பட்ட இருமல் முதலான அனைத்து கப நோய்களும் குணமாகும்.
மருந்தறிவியலில் தேரன் சித்தர் பாடிய பாடல்கள் மிகவும் பயனுள்ளவை. சில மருந்துகளைக் கூறிவிட்டு, அது தொடர்பான நோய் குணமாகவில்லையென்றால், தன் பெயரை மாற்றிக்கொள்வதாகச் சவால்விடுவது தேரனின் சிறப்பு.
‘எட்டுத் திப்பிலி ஈரைந்து சீரகம்
கட்டுத் தேனில் கலந்துண்ண – விக்கலும்
விட்டுப் போகும் விடாவிடில் போத்தகமும்
சுட்டுப் போடு யான் தேரனுமல்லனே.’
`எட்டுப் பங்கு திப்பிலியையும், பத்துப் பங்கு சீரகத்தையும் பொடியாக்கி தேனில் கொடுக்க விக்கல் குணமாகும். விக்கல் நிற்கவில்லையென்றால், மயிலிறகைச் (போத்தகம்) சுட்டுச் சாம்பலாக்கிக் கலந்து கொடுக்கலாம். அப்படியும் விக்கல் விடவில்லையெனில், என் பெயர் தேரன் இல்லை’ என்பது இதன் பொருள்.
மீள முடியாத அல்லது தப்ப முடியாத புதர்க்கொடியான இண்டு முள்ளைத்தான் சிறந்த உயிர்வேலித் தாவரமாக நமது முன்னோர்கள் வைத்திருந்தார்கள்.’’
இன்னும் ஒருபடி மேலே போய், ‘யான் தேரனுமல்லனே’ என்பதோடு, தண்டமும் (அபராதமும்) தருவதாகப் பின்வரும் பாடல் உள்ளது.
‘இண்டிலை தூதுவேளை யிசங்கு திப்பிலி
கண்டரி சுக்குடன் கலந்து வெந்தநீர்
உண்டில் வொருதர மிரும லுற்றிடில்
தெண்டமுந் தருவன்யான் தேரனு மல்லனே.’ – தேரன் 100
இண்டக்கொடிச் சமூலம், தூதுவேளை, கண்டங்கத்திரி வகைக்கு 1 பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கீராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்துவர இரைப்பிருமல் தீரும், குழந்தைகளுக்கு 25 மில்லி. வீதம் கொடுத்து வர இரைப்பிருமல் தீரும். குணமாகவில்லையெனில் நான் தண்டம் தருகிறேன். என் பெயரான தேரன் என்பதை மாற்றிக்கொள்கிறேன்’ என்பது இதன் பொருள்
குழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.இண்டம் வேர் தூதுவேளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும். இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.
சளி, இருமல், காய்ச்சல் குணமாகும். அளவை அதிகரித்துக் கொடுத்தால் ஆபத்தை விளைவிக்க வாய்ப்புகள் உள்ளன.