ஐக்கிய நாடுகள் (ஐநா) சபையின் சக்திவாய்ந்த அமைப்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளில் பயங்கரவாத மற்றும் அசாதாரண சூழல்களைத் தடுத்து அமைதியை நிலைநாட்டுவதே இந்த அமைப்பின் தலையாயக் கடமை.
இதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதுதவிர பத்து நாடுகள் தற்காலிகமான உறுப்பினராகவும் உள்ளன.
தற்காலிக உறுப்பினர்களின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் பிராந்தியங்களின் அடிப்படையில் ஐந்து இடங்களுக்கான தேர்தல் நடைபெறும்.
பிராந்தியங்களில் இருக்கும் நாடுகள், தேர்தலில் நிற்கும் நாட்டிற்கு தங்களது வாக்குகளைச் செலுத்தும். அந்த வகையில் இந்தாண்டு ஜூனில் நடைபெற்ற தேர்தலில் ஆசிய-பசிபிக் பிராந்திய உறுப்பினர் இடத்திற்கு இந்தியா போட்டியிட்டது.
பிராந்தியத்திலுள்ள பெரும்பாலான நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவளித்ததால், இந்தியா எட்டாவது முறையாகத் தற்காலிக உறுப்பினராகியது.
2021, 2022 ஆகிய ஆண்டுகளில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக இந்தியா இருக்கும். அதேபோல இந்த கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் ஒவ்வொரு மாதமும் கவுன்சிலுக்கு தலைமை தாங்கும்.
அந்த வரிசையில் இந்த மாதம் பாதுகாப்பு கவுன்சிலுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளது. 75ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் அதே மாதத்தில் பாதுகாப்பு கவுன்சிலுக்கு தலைமை தாங்குவது இந்தியாவுக்கு மரியாதைக்குரிய நிகழ்வு. மிக முக்கியமாக இந்த கவுன்சிலுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குகிறார்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் (யுஎன்எஸ்சி) கூட்டத்துக்கு தலைமை வகிக்கப் போகும் முதல்இந்திய பிரதமர் என்ற பெருமையைநரேந்திர மோடி பெறவுள்ளார் என்று ஐ.நா. சபைக்கான முன்னாள்இந்திய தூதர் அக்பருதீன் கூறினார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் தலைமை தாங்குவது இதுவே முதன்முறை. மூன்று உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றும் கடலோர பாதுகாப்பு, அமைதி நடவடிக்கை, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் இந்திய தரப்பில் கூறப்பட்டுள்ளது.
சர்வதேச அமைதியை வலுப்படுத்துவதற்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், தலைமை பதவியில் செயல்படுவோம் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதியளித்துள்ளார்.
எப்போதும் மிதவாதிகளின் குரலாகவும் பேச்சுவார்த்தையை ஆதரிக்கும் நாடாகவும் இந்தியா இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.