காதலித்து ஏமாற்ற நினைத்த காதலனை போலீசார் முன்னிலையில், காதலி திருமணம் செய்து கொண்டார்.
கடலுார் மாவட்டம், சின்னாத்துக்குறிச்சியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகள் சுகுணா, 26; டிப்ளமோ நர்சிங் முடித்துள்ளார்.
இவரும் அரியலுார் மாவட்டம், பெரிய ஆத்துக்குறிச்சியை சேர்ந்த மாயவேல் மகன் மணிவேல், 27; என்பவரும் 8 ஆண்டுகளாக காதலித்தனர்.
சுகுணாவை திருமணம் செய்து கொள்வதாக மணிவேல் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சில தினங்களுக்கு முன் மணிவேலுக்கு வேறு பெண்ணை திருமணம் செய்து வைக்க, அவரது பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.
இதையறிந்த சுகுணா பெற்றோருடன் மணிவேல் வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டார்.
அதற்கு மணிவேல் மறுத்துள்ளார். இதையடுத்து சுகுணா விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.
இன்ஸ்பெக்டர் ரேவதி இருவரையும் நேற்று அழைத்து பேசினார். அப்போது மணிவேல், சுகுணாவை காதலித்ததை ஒப்புக் கொண்டார்.
இருவருக்கும் அறிவுரை கூறிய போலீசார், இருவரின் பெற்றோரை அழைத்து, திருமணம் செய்து வைக்க ஆலோசனை அளித்தனர்.
அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரே, எம்.ஜி.ஆர்., நகரில் உள்ள வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் இருவருக்கும் நேற்றிரவு 8 மணிக்கு திருமணம் நடந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.