காபூல் ஏர்போர்ட்டில் குழந்தைகளை வீரர்களிடம் தூக்கி எறிந்துள்ளனர் தாய்மார்கள்
காபூல் ஏர்போர்ட்டில் தாலிபான்கள் துப்பாக்கி தாக்குதல் நடத்த தொடங்கியதுமே, எப்படியாவது தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், பச்சிளம் குழந்தைகளை ராணுவ வீரர்களிடம் தாய்மார்கள் வீசியெறிந்த சம்பவம் நிலைகுலைய வைத்து வருகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வந்தது.
இதில், ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி விட்டனர். அதேபோல தலைநகர் காபூலையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனால் இந்த நாட்டு மக்களிடையே ஒருவித பதட்டமும், பயமும், பீதியும், அச்சமும், பற்றி கொண்டுள்ளது.. இதனால், ஆயிரக்கணக்கான மக்கள் ஆப்கனிலிருந்து வெளியேறி கொண்டிருப்பதால், காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் கூட்டம் குவிந்து வருகிறது..
அமைதியான ஆட்சி தருவோம் என்று தாலிபான்கள் உறுதி தந்த நிலையிலும், பொதுமன்னிப்பு தரப்படும் என்று அறிவித்த பிறகும், பெண்களுக்கு அரசாங்கத்தில் பங்கு என்று அழைப்பு விடுத்த போதிலும், அதை அந்நாட்டு பெண்கள் ஏற்கவில்லை.
இதனால் தொடர்ந்து காபூல் ஏர்போர்ட்டில் மக்கள் குவிவதால், அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் சர்வதேச ஊடகங்களில் தகவல் வெளியானது.
அதில், ஏர்போர்ட்டில் கூட்டம் கூடுவதை தடுக்க தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்றும் 10 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர் என்றும் அப்படி படுகாயம் அடைந்தவர்களில் பெண்களும், குழந்தைகளும் அடங்குவர் என்றும் கூறப்பட்டிருந்தது.
பழிவாங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு, இப்படி தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியாக உள்ளதாகவும் அந்த ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனாலும் இந்த குற்றச்சாட்டுக்கு தலிபான்கள் எந்த விளக்கமும் தரவே இல்லை.
பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்று பேட்டி தந்த அன்றே, பெண்கள் சவுக்கால் அடிக்கப்பட்டு ரத்தம் சொட்டச் சொட்ட விழுந்து கிடக்கும் காட்சிகளும் வெளியாகின.
அதிலும் ஆஸ்திரேலிய ராணுவத்திற்கு மொழி பெயர்ப்பாளராக வேலை பார்த்த ஒருவர், ஏர்போர்ட்டுக்குள் நுழைய வரிசையில் காத்திருந்தார். செக்போஸ்ட்டில் காவல் காத்துக்கொண்டிருந்த தலிபான் உறுப்பினர் ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்ட காட்சியும் வெளியாகி அதிர்ச்சியை தந்தது.
மற்றொருபுறம், காபூல் ஏர்போர்ட்டில் இருந்து கும்பல் கும்பலாக மக்கள் விமானத்தில் ஏற முயன்ற வீடியோவும் வெளிவந்தது. அப்போது ஒரு காட்சி காண்போர் அனைவரையும் கலங்கடித்தது. 7 மாத பெண் குழந்தை ஒன்று, தன் பெற்றோரை பிரிந்த நிலையில், ஒரு பிளாஸ்டிக் கூடையில் அழுது கொண்டிருந்தது. அந்த குழந்தையின் போட்டோ வெளிவந்து அனைவரையும் கண்கலங்க செய்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழலில் இன்னொரு வீடியோவும் வெளியாகி உள்ளது.. ஏர்போர்ட்டில் தாலிபான்கள் தாக்க தொடங்கியதுமே, எப்படியாவது தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்தில், அந்த குழந்தைகளை ராணுவ வீரர்களிடம் தாய்மார்களே வீசியுள்ளனர்.
காபூல் ஏர்போட்டை சுற்றி முள்வேலி அமைக்கப்பட்டுள்ளது.. அந்த முள்வேலிக்கு வெளியே ஆப்கானிஸ்தான் தாய்மார்கள், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றுவதற்காக, அவர்களை முள்வேலியை தாண்டி ராணுவ வீரர்களிடம் வீசியுள்ளனர்.
இதுகுறித்து ஒரு ராணுவ வீரர் சொல்லும்போது, “என் குழந்தையை காப்பாத்துங்க” என்று கதறிக்காண்டே குழந்தையை தூக்கி ஏர்போர்ட்டுக்குள் நிற்கும் ராணுவ வீரர்களிடம் பெற்ற தாய்மார்கள் வீசியுள்ள காட்சி காண்போரை நிலைகுலைய செய்து வருகிறது.
இதில் கொடுமை என்னவென்றால், சில குழந்தைகள் வேலியை தாண்டி ஏர்போர்ட்டிக்குள் விழுந்தது.. சில குழந்தைகள் முள்வேலிக்குள்ளேயே விழுந்தது. அந்த பயங்கரத்தை சொல்ல முடியவில்லை. எங்க படைவீரர்கள் எல்லாரும் அழுதுவிட்டோம்” என்கிறார்.