கோவையில் அக்காவுக்கு வீடியோகாலில் தகவல் தெரிவித்து விட்டு கூர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மதுக்கரை ரோடு அண்ணா நகரை சேர்ந்தவர் டமால் பண்டாரி(56). நேபாளத்தை சேர்ந்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கோவைக்கு வந்து செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இதனிடையே டமால் பண்டாரி மதுப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனால் பல முறை தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு நேபாளத்தில் உள்ள தனது அக்காவிற்கு வீடியோ காலில் பேசிய டமால் பண்டாரி, தான் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும், அதற்காக தயார் நிலையில் வைத்திருந்த பொருட்களையும் காண்பித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவரது அக்கா, இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அவரது மகன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது டமால் பண்டாரி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.