தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிகோட்டை மறியல் பகுதியை சேர்ந்தவர் அறிவுடைய நம்பி (41). இவர் தஞ்சை மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி செயலாராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டதாக கூறி கடலூரை சேர்ந்த 28 வயதான ராகவி என்ற பெண்ணுடன் கடந்த மார்ச் மாதம் திருமணம் நிச்சயம் செய்துள்ளார்.
கடந்த மே மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில், அறிவுடைய நம்பிக்கு வேறுசில பெண்களுடன் தொடர்பு இருப்பதை அறிந்த மணப்பெண் உடனடியாக திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அறிவுடைநம்பி, அப்பெண்ணுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, சமூக வளைதளங்களில் பதிவிட்டு உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட கடலூரை சேர்ந்த பெண் கடந்த ஜூலை மாதம் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதனையடுத்து போலீஸார் வழக்கு பதிவு செய்து அறிவுடைநம்பியை தேடி வந்தனர்.
மேலும் புகார் அளித்திருந்த கடலூரை சேர்ந்த பெண்ணுக்கு அறிவுடைநம்பி தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இரண்டு மாதமாக போலீஸாரிடம் சிக்காமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்ரியா உத்தரவின் பேரில் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திரபோஸ் மேற்பார்வையில் வல்லம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார் அவரை சென்னையில் உள்ள ஒரு ஹோட்டலில் வைத்து கைது செய்தனர்.
மேலும் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறிவுடைநம்பியை கைது செய்து நேற்றிரவு சிறையில் அடைத்தனர்.