கன்னியாகுமரி மாவட்டத்தில் பூட்டிய கோயில் மற்றும் வீடுகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்ட பிளம்பர் கைது.
அவரிடம் இருந்து 600-கிலோ வெண்கல பொருட்கள் மற்றும் தங்க நகைகள் மீட்கப்பட்ட நிலையில், கூட்டாளிகளையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பூட்டியிருக்கும் கோயில் மற்றும் வீடுகளை குறிவைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் குத்துவிளக்கு உள்ளிட்ட வெண்கலத்தாலான கோயில் பூஜை பொருட்களை கொள்ளையடித்து செல்வது தொடர்கதையாக இருந்த நிலையில் கொள்ளையர்களை கண்காணித்து அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ஆசாரிப்பள்ளம் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் குத்துவிளக்கு மற்றும் பூஜை பொருட்கள் திருடுபோன நிலையில், போலீசார் அந்த கோயிலை சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் பொருட்களை திருடி சென்றது பதிவாகி இருந்தது.
இதனையடுத்து ஆசாரிப்பள்ளம் குளச்சல் பிரதான சாலையில் முக்கிய சந்திப்பு பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், அந்த மர்ம கும்பல் அந்த வழியாக வந்து இறுதியில் சடையால்புதூர் பகுதியில் ஒரு வீட்டிற்குள் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்த நிலையில், அந்த வீட்டை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு தூங்கி கொண்டிருந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர், வெள்ளிச்சந்தை பகுதியைச் சேர்ந்த அனிஷ்ராஜன் என்பதும், இவர் பிளம்பராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அனிஷ்ராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 600-கிலோ எடையுள்ள வெண்கல பொருட்கள் தங்க நகைகள் டிவி உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்ததோடு அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்து தலைமறைவான அவனது கூட்டாளிகள் மூன்று பேரை வலைவீசி தேடி வருகின்றனர்