தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் 6 அக்டோபர் மற்றும் 9 அக்டோபர் என இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்தார்.
தொடர்ந்து வரும் அக்டோபர் 12 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை (Local Body Election) நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனுத் தாக்கல் தொடங்கிய முதல் 2 நாட்களில் மட்டும் 13,542 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தற்போது தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் தமிழகத்தின் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலுக்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-அ.தி.மு.க இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.
பா.ம.க இதில் இருந்து விலகி தனியாக தேர்தலை சந்திக்கிறது. மேலும் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன.
இதற்கிடையில் இந்த தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய் மக்கள் இயக்க மாநில பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 மாவட்ட நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
விஜய்யின் மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும். ஆனால் நடிகர் விஜய்யின் பெயரை, மக்கள் இயக்கத்தை பயன்படுத்தாமல் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 128 பேர் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனது பெயரையோ, தனது ரசிகர் மன்றத்தின் பெயரையோ பயன்படுத்துவதை தடை செய்யக் கோரி தனது தந்தை மற்றும் தாய் உட்பட 11 நபர்கள் மீது நடிகர் விஜய் சென்னை சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இம்மாத இறுதியில் விசாரணைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.