நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரிய மசோதாவை விரிவான விளக்கத்துடன் ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.
தேசிய அளவில் மருத்துவப் படிப்புகளுக்காக நடத்தப் படும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கும் சட்ட மசோதா கடந்த ஆண்டு செப்.13ல் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.
இது தொடர்பாக குடியரசுத் தலைவர் மாளிகையில் திமுக., எம்பி.,க்கள் மனு அளித்திருந்தனர். தமிழகத்தில் அரசியல் கட்சிக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இது குறித்துப் பேசியிருந்தனர்.
இந்நிலையில் இன்று தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
நீட் தேர்வில் விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவையும், தமிழக அரசு அமைத்த குழுவின் அறிக்கையையும் குறித்து ஆளுநர் தீவிர ஆலோசனை நடத்தினார். இந்த மசோதா மாநிலத்தில் வசிக்கும், பொருளாதார மற்றும் சமூக ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு எதிராக உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யுமாறு கோரி, தமிழக சட்டமன்ற அவைத்தலைவருக்கு ஆளுநர் திருப்பி அனுப்பிவிட்டார்.
நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக வேலூரில் உள்ள சிஎம்சி மருத்துவக் கல்லூரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்வு குறித்து நன்கு ஆராய்ந்ததுடன் ஏழை மாணவர்களின் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்கவும், சமூக நீதியை மேம்படுத்தவும் நீட் தேர்வு உதவுகிறது என்பதை உறுதி செய்தது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதை அடுத்து வரும் பிப்.5ஆம் தேதி, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி விவாதிக்கப் போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த போது… நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் தமிழக மக்களால் ஏற்கத் தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். ஆளுநரின் கருத்துகள் ஆராயப்பட்டு நீட்தேர்வு பற்றிய உண்மை நிலை அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும்.
நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட்விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய பிப்.5ம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறும். சட்டத்துக்கு அடிப்படையான கூற்றுகள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல என்று குறிப்பிட்டார்.
இதனிடையே நீட் விலக்கு மசோதா தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து முதல்வர் ஸ்டாலின் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக., பங்கேற்காது என்று அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.