சென்னை:
1948 ஜன.30ம் தேதி மறைந்தார் மகாத்மா காந்தி. இன்று காந்தி நினைவு தினம் என்பதால் சென்னையில் இன்று 2 நிமிடங்கள் போக்குவரத்து நிறுத்தப் படுகிறது.
காந்தி நினைவு தினம், தியாகிகள் தினமாக கடைப் பிடிக்கப் படுகிறது. இந்த தினத்தை ஒட்டி, சென்னையில் இன்று இரு நிமிடம் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30ம் தேதி தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இவ்வாண்டு தியாகிகள் தினத்தையொட்டி, ஜனவரி 30ம் தேதி (இன்று) காலை 11 மணி முதல் 11.02 வரை இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் சென்னை பெருநகரில் போக்குவரத்து இரு நிமிடங்கள் நிறுத்தப்படும். இதற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
- இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.