உலகமே கொரோனா எனும் கொடிய அரக்கனிடம் சிக்கி சின்னாபின்னாமாகி கிடக்கிறது. இரண்டு ஆண்டுகளாகியும் முழுமையாக அதிலிருந்து விடுபட முடியவில்லை.
அதன் லேட்டஸ்ட் வெர்சனான ஒமைக்ரான் வந்த வேகத்தில் அப்படியே தணிந்துவிட்டது. இப்போது உலகம் சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இச்சூழலில் அதிர்ச்சியளிக்கும் விதமாக புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று பிரிட்டனில் பரவி வருகிறது. அந்த காய்ச்சலுக்கு பெயர் லஸ்ஸா. பெயரை கேட்டால் லேசாக தெரியலாம். ஆனால் இது அதி பயங்கரமானது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
இது ஆப்பிரிக்காவில் வாழும் மாஸ்டோமிஸ் எனும் ஒருவகை எலியின் மூலம் மனிதர்களுக்குப் பரவுகிறது. லஸ்ஸா வைரஸ் அரீனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்த லஸ்ஸா வைரஸால் பாதிக்கப்பட்ட எலிகளின் சிறுநீரோ மலமோ உணவுகளின் மீது பட்டால், அதை சாப்பிடும் மனிதர்களுக்கு மிக எளிதாகப் பரவுகிறது. அப்படியே ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கும் பரவும். அந்த வகையில் தற்போது பிரிட்டனில் மூன்று பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
1969ஆம் ஆண்டு ஆப்பிக்க நாடான நைஜீரியாவில் தான் லஸ்ஸா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் தொற்று அடிக்கடி ஏற்படுகிறது.
பிரிட்டனில் 1988ஆம் ஆண்டு இது பரவியது. அன்றிலிருந்து 2009ஆம் ஆண்டு வரை 8 பேரை தாக்கியுள்ளது. எபோலா, மலேரியா, டைபாய்டு போன்ற ரத்தக்கசிவு காய்ச்சல் போன்றது தான் லஸ்ஸா காய்ச்சல். இதன் காரணமாகவே லஸ்ஸா காய்ச்சலை கண்டறிவது மிக மிக கடினம். லஸ்ஸாவின் தாக்கம் 2 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.
லேசான அறிகுறிகள் இருந்தாலும் அவ்வளவு சீக்கீரத்தில் கண்டறிய முடியாது. ஆரம்பத்தில் காய்ச்சல், உடல்சோர்வை கொடுக்கும். நாட்கள் செல்ல செல்ல தலைவலி, தொண்டை வலி, தசை வலி, மார்பு வலி, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, இருமல், வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படும்.
தீவிரமடைந்தால் முக வீக்கம், வாய், மூக்கு, பிறப்புறுப்பு, இரைப்பை குழாய் ஆகியவற்றியிருந்து ரத்தக்கசிவு ஏற்படும். நுரையீரலிலும் பாதிப்பை உண்டாக்கும். குறை ரத்த அழுத்தமும் உண்டாகும்.
தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் 14 நாட்களுக்குள் மரணமடைவார்கள். ஆரம்பத்திலேயே கண்டறிந்த சிகிச்சையளித்தால் ஓரளவு குணப்படுத்த முடியும்.
இல்லையெனில் மரணத்தின் வாசலை எட்டிப் பார்க்க வேண்டி வரும். லஸ்ஸா காய்ச்சலால் ஆண்டுக்கு 1 லட்சம் முதல் 3 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். அதில் 5,000 பேர் உயிரிழக்கின்றனர்.
நோயாளிகளுக்கு ரிபாவிரின் (Ribavirin) மருந்து கொடுக்கப்படுகிறது. இது நல்ல பலனைக் கொடுக்கிறது. ஆரம்பக்கட்டத்தில் கொடுக்கப்பட்டால் எளிதில் குணமடையலாம். இந்தியாவில் லஸ்ஸா வைரஸ் பரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.