அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம். கடந்த கல்வியாண்டில், கொரோனா காரணமாக கவுன்சிலிங் நடத்தவில்லை.
எனவே, இந்த ஆண்டாவது இடமாறுதல் கவுன்சிலிங்கை நடத்தி, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க வேண்டும் என்று, ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர்.
அதை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை, இந்த ஆண்டு ‘ஆன்லைன்’ மூலம் கவுன்சிலிங் துவங்கியது.
இதில் முதல் கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, இடமாறுதல், பணி நிரவல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளன.
முதுநிலை ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கவுன்சிலிங், நீதிமன்ற வழக்கு மற்றும் நிர்வாக காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஏற்கெனவே பணி இடமாறுதல் பெற்ற ஆசிரியர்கள், வரும் 28-ம் தேதி தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு, மார்ச் மாதம் 1-ம் தேதி புதிய இடத்தில் பணியில் சேர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.