புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நகர்ப்புற உள்ளாட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்கும் விழா, 648 இடங்களில் இன்று நடந்தது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளில் 1,373 கவுன்சிலர்கள்; 138 நகராட்சிகளில் 3,842 கவுன்சிலர்கள்; 489 பேரூராட்சிகளில் 7,604 கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று பதவி ஏற்றனர். இதற்காக, 648 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
மாநகராட்சி மற்றும் நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் முன்னிலையில், புதிய கவுன்சிலர்கள் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர்.
இதை தொடர்ந்து, வருகிற 4ம் தேதி காலை 9:30 மணிக்கு மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்க உள்ளது. பிற்பகல் 2:30 மணிக்கு துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி துணை தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடக்கவுள்ளது.