![முன் பதிவில்லாத பெட்டிகள் இயக்கம்: தெற்கு இரயில்வே! 1 train service](https://dhinasari.com/wp-content/uploads/2022/02/train-service-1024x576.jpg)
வழக்கமான ரயில்களில் (மெயில், விரைவு ரயில்களில்) முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி இயக்க தெற்கு ரயில்வே ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தெற்கு ரயில்வேயின் ஆறு கோட்டங்களில் இருந்து இயக்கப்படும் 192 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன.
கொரோனா முதல் அலை பரவல் தடுக்கும் வகையில், பொதுமுடக்கம் 2020-ஆம் ஆண்டு மாா்ச்சில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பயணிகள் ரயில்சேவை நிறுத்தப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றின் பரவல் குறைந்த பிறகு, மெயில், விரைவு சிறப்பு ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. அதேநேரத்தில், குறைவான ரயில்களில் மட்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கப்பட்டன.
இதற்கிடையில், கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்ததால், கொரோனாவுக்கு முந்தைய நிலையை பின்பற்றி, வழக்கமான ரயில்களில் கொரோனா நோய்த்தொற்று முந்தைய கட்டணத்துடன் இயக்கும் நடவடிக்கை தொடங்கியது.
இதன்பிறகு, படிப்படியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதுதவிர, விரைவு, மெயில் ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கமான ரயில்களில் (முன்பதிவு பெட்டிகளைக் கொண்ட ரயில்களில்) முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு பெட்டிகள் ஒதுக்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அதாவது, கரோனா நோய்த்தொற்று பரவலுக்கு முன்பு, இயக்கப்பட்டது போல மீண்டும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படும். இதைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வேயில் அனைத்து மெயில், விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படவுள்ளன.
மெயில், விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி, இயக்குவது மாா்ச் 10, 16, 20, ஏப்ரல் 1, 16, 20, மே 1ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படவுள்ளது. அதன்படி, தெற்கு ரயில்வேயில் மாா்ச் 16-ஆம் தேதி 38 ரயில்களிலும், ஏப்ரல் 1-ஆம்தேதி 18
ரயில்களிலும், ஏப்ரல் 16-ஆம் தேதி 20 ரயில்களிலும், மே 1-ஆம்தேதி 14 ரயில்களிலும் என்று மொத்தம் 90 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படவுள்ளன.
இதுதவிர, தென் மேற்கு மற்றும் தென் மத்திய ரயில்வே ஆகிய ரயில்வேயில் இருந்து முன்பதிவில்லாத பெட்டிகள் கொண்ட குறிப்பிட்ட ரயில்கள் இயக்கப்படும்.
தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் இருந்து 62 ரயில்கள், திருச்சிராப்பள்ளி கோட்டத்தில் இருந்து 18 ரயில்கள், மதுரை கோட்டத்தில் இருந்து 23 ரயில்கள், சேலம் கோட்டத்தில் இருந்து 15 ரயில்கள், பாலக்காடு கோட்டத்தில்
இருந்து 33 ரயில்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் இருந்து 41 ரயில்கள் என்று மொத்தம் 192 ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டிகள் ஒதுக்கி இயக்கப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:
முன்பதிவு செய்யாத பயணிகள் இடையூறு இல்லாமல் எளிதாக பயணிக்கும் விதமாக, இந்த பெட்டிகள் ஒதுக்கப்படவுள்ளன. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் மீண்டும் ஒதுக்கி, இயக்கப்படவுள்ளதால், அந்த தேதிகளில் அல்லது அதற்குப் பிறகு தொடங்கும் பயணத்துக்காக, ரயில்களில் மாற்றப்படும் பெட்டிகளில் ஏற்கெனவே முன்பதிவு செய்த பயணிகள் முழுப் பணத்தைத் திரும்பப் பெறலாம். டிக்கெட்களை ரத்து செய்வது குறித்து பயணிகள் பதிவு செய்த கைப்பேசி எண்களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும் என்றனர்.