திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்-லைனில் வெளியிடும் ரூ.300 டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு கிடைப்பது அரிதாக உள்ளது.
நாளொன்றுக்கு 25000 என்ற எண்ணிக்கையில் 30 நாட்களுக்கு ஒரு முறை தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடுகிறது. அந்த டிக்கெட்டுகள் அதிகபட்சமாக 20 நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்து விடுகின்றன.
இதுதவிர திருப்பதியில் உள்ள கவுண்டர்களில் நாளொன்றுக்கு 30000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கி வருகிறது.
இதற்காக ஒரு நாள் முன்னர் சென்று திருப்பதியில் காத்திருந்து டிக்கெட்டுகளை வாங்கி திருமலைக்கு செல்ல வேண்டும்.
ஆனால் தேவஸ்தான நிர்வாகம் 300 ரூபாய் டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இன் வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது.
அவற்றை ஐஆர்சிடிசி ஆன்லைனில் அவ்வப்போது வெளியிட்டு பக்தர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஒவ்வொரு டிக்கெட்டிற்க்கும் 990 ரூபாய் கட்டணம் செலுத்தி பக்தர்கள் அவற்றை முன்பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின்னர் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் நாளன்று திருப்பதி ரயில் நிலையத்திலிருந்து பக்தர்களை வேன் அல்லது கார் மூலம் திருமலைக்கு ஐஆர்சிடிசி நிறுவனம் அழைத்து செல்லும்.
அங்கு பகல் 11 மணிக்கு ஐஆர்சிடிசி நிறுவனத்திலிருந்து டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சாமி கும்பிட கோவிலுக்குள் செல்லலாம். ஒரே மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசித்த பின் பக்தர்களுக்கு டிக்கெட்டுக்கு உரிய லட்டு பிரசாதம் ஒன்றை ஐஆர்சிடிசி நிறுவனம் உதவியாளர் வாங்கி கொடுப்பார்.
கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் தலா 50 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். சொந்த செலவில் மதிய உணவிற்கு பின் பக்தர்கள் திருப்பதி மலையிலிருந்து திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
பத்மாவதி தாயாரை தரிசித்த பின் பக்தர்களை மீண்டும் ஐஆர்சிடிசி திருப்பதி ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து வழியனுப்பி வைக்கும்.
ஏழுமலையானை தரிசிக்க தேவையான டிக்கெட்டுகளை பெற விரும்பும் பக்தர்கள் ஐஆர்சிடிசி நிறுவனத்தின் வெப்சைட்டில் அவற்றை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
இது தவிர நாட்டின் பல்வேறு பாகங்களிலிருந்தும் ரயில், விமானம் ஆகியவற்றின் மூலம் ஏழுமலையானை தரிசிப்பதற்கான பேக்கேஜ் ட்ரிப்களை ஐஆர்சிடிசி நிர்வகித்து வருகிறது.
பக்தர்கள் ஐஆர்சிடிசி வெப்சைட்டில் தேவையான தகவல்களை பெற்று அவற்றையும் முன்பதிவு செய்து ஏழுமலையானை வழிபட வாய்ப்புகள் உள்ளன.