இலங்கை கடற்படையினர் கைது செய்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் தலா ரூ.1 கோடி உத்தரவாத தொகை கேட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு தலையிட்டு இந்த பிரச்சினை க்கு தீர்வு காண மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த மாதம் 23-ந் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 12 மீனவர்கள் ஒரு படகில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் கிளிநொச்சி நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரும் நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, மீனவர்கள் 12 பேரும் ஜாமீனில் செல்ல விருப்பப்பட்டால் ஒவ்வொரு மீனவரும் தலா ரூ.1 கோடி நீதிமன்றத்தில் உத்தரவாத தொகையாக கட்ட வேண்டும் எனவும், பணம் கட்ட தவறினால் வருகின்ற மே 12-ந் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் உத்தரவிட்டார்.
இதேபோல் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மண்டபத்தை சேர்ந்த 4 மீனவர்களும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அப்போது இந்த 4 மீனவர்களுக்கும் வருகின்ற 21-ந் தேதி வரையிலும் காவல் நீட்டிப்பு செய்து சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம் மீனவர்களை ஜாமீனில் விடுவிக்க இலங்கை நீதிமன்றம் தலா ரூ.1 கோடி உத்தரவாத தொகை கேட்டுள்ளது தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்றாட பிழைப்பு க்கே வழியில்லாத மீனவர்கள் ஒருகோடி ஜாமின் தொகை எப்படி கட்டுப்படுத்துவது என் கலங்கிப் போயுள்ளனர்.