தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக எம்.எல்.ஏ., செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கே.எஸ். அழகரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை கட்சி மேலிடம் நியமித்துள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப்.17 இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
தமிழக காங்கிரஸ் தவைராக செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சித் தலைவரால் நியமிக்கப்படுகிறார். இந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதுவரை தலைவராக இருந்த கே.எஸ். அழகிரியின் பங்களிப்பு பாராட்டுதலுக்குரியது. மேலும், தமிழக சட்டசபை குழுத் தலைவராக ராஜேஷ் குமார் நியமனத்துக்கு காங்கிரஸ் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார் – இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே சில மாதங்களாகவே காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து தகவல்கள் கசிந்து வந்தன. செல்வப்பெருந்தகையுடன், கரூர் எம்.பி ஜோதிமணி, எம்.எல்.ஏ., விஜயதாரணி உள்ளிட்டோரும் தலைவருக்கான போட்டியில் இருந்ததாகவும், ராகுலுக்கு நெருக்கமாக இருப்பவர்க்கே கிடைக்கும் என்பதால், இவர்களில் ஒருவருக்கு தலைவர் பதவி கிடைக்கும் என்றும் செய்திகள் உலா வந்தன.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமனம் செய்யப்பெற்றுள்ள செல்வபெருந்தகை இதுகுறித்துக் கூறியபோது, என்னை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்துள்ளது ஆச்சரியம் தந்துள்ளது. தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் ஆகியோருக்கு நம்பிக்கைக்குரியவனாக இருப்பேன். தலைமையின் நம்பிக்கை வீண்போகாமல் பணியாற்றுவேன். வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைப்போம் என்று கூறினார்.