2024 மக்களவைத் தேர்தலுக்கான திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்தது. இதன் விவரம் :
திமுக – 21
காங்கிரஸ் – 9 + புதுச்சேரி
விசிக – 2 (சிதம்பரம், விழுப்புரம்)
சிபிஐ – 2
சிபிஎம் – 2
மதிமுக -1
இயூமுலீ – 1 (ராமநாதபுரம்)
கொமதேக – 1 (நாமக்கல்)
தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு காங்கிரஸ் தவிர மற்ற கட்சிகளுக்கு முடிவடைந்த நிலையில் இருந்தது. விடுதலைச் சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ ஆகியவை தலா இரண்டு தொகுதிகள் பெற்ற நிலையில், மதிமுக., முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை தலா ஒரு இடம் பெற்ற நிலையில், கமல்ஹாசனின் மக்கள் நீதி மையமும் கூட்டணியில் பேச்சு வார்த்தை நடத்தியது.
இந்நிலையில் இன்று மதியம், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் ஹாசன் இந்தத் தேர்தலில் திமுக., கூட்டணிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும், போட்டியிடவில்லை என்றும், அடுத்த ஆண்டு காலியாகும் மாநிலங்களவை இடம் ஒன்று தருவதாகவும் ஒப்பந்தம் கையெழுத்தானகக் கூறினார்.
இதனிடையே இன்று மாலை காங்கிரஸ் மேலிட நிர்வாகிகள் திமுக., தொகுதிப் பங்கீட்டுக் குழுவை சந்தித்தனர். அதன் படி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக., தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய கே.சி.வேணுகோபால், அஜோய்குமார், முகுல் வாஸ்னிக், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயத்தில் இருந்தனர். காங்கிரஸ் கேட்கும் மொத்த தொகுதிகள் குறித்தும், எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டு குழுவுடன் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்தினார்.
இதன் இறுதியில், காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என மொத்தம் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து திமுக., கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, அதிகாரபூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. 40 தொகுதிகள் கொண்ட தமிழகம் புதுச்சேரியில் பாதிக்குப் பாதியாக 21 இடங்களில் மட்டுமே திமுக., போட்டியிடுகிறது.