மணற்கொள்ளை, ரூ.4300 கோடி ஊழல், போதைப் பொருள்கள் மூலம் சிறு குழந்தைகளையும் நாசமாக்கி வைத்திருப்பது – இதுதான் திமுக.,! இந்த தமிழகத்தைக் காப்பாற்ற பாஜக., கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என, வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, பொதுக்கூட்ட மேடைக்கு வந்த பிரதமர் மோடி அனைவரையும் தனித்தனியாகப் பார்த்து வணக்கம் சொன்னார். தமிழக செங்கோலின் பெருமையை நாடெங்கும் உணர்த்த வைத்த பிரதமர் மோடிக்கு, வேட்பாளர்கள் சார்பில் வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் பொன்னாடை போர்த்தி, பிரதமர் மோடியை வேட்பாளர்கள் வரவேற்றனர்.
வேலூர் வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திருவண்ணாமலை வேட்பாளர் அஸ்வத்தாமன், தருமபுரி வேட்பாளர் சௌமியா அன்புமணி ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பிரதமர் மோடி பேசினார்.
வேலூரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி தமிழில் உரையை தொடங்கிப் பேசினர். பின்னர் அவர் வழக்கம்போல் ஹிந்தியில் பேசினார் அதை மாநில துணைத்தலைவர் நரேந்திரன் மொழிபெயர்த்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது …
என் அன்பார்ந்த தமிழ் சகோதர, சகோதரிகளே வணக்கம்.. தமிழில் பேச முடியாததற்கு மிகவும் வருத்தப்படுகிறேன். பொது மக்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்ப் புத்தகாண்டில் தமிழகம் மேன்மேலும் வளர்ச்சி அடையும் என நம்புகிறேன்.
வேலூரில் புதிய வரலாறு ஏற்படப் போகிறது என்பது தில்லியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களுக்கு தெரியாது. வேலூர் சரித்திரம், பாரம்பரியம், பழைமை போன்றவற்றில் சிறந்து விளங்குகிறது. அதை நான் வணங்குகிறேன். இங்கே புராணப் பெருமை கொண்ட கோட்டை ஜலகண்டேஸ்வரர் சுவாமியையும் முருகன் பெருமானையும் நான் வணங்குகிறேன்.
வரலாற்றுச் சிறப்பு கொண்ட வேலூர் மீண்டும் ஒரு வரலாற்றை உருவாக்க இருக்கிறது. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்த்தையும் இந்தத் தமிழ்நாட்டையும் வளர்ச்சி அடைந்த மண் ஆக்குவோம்.
2014-க்கு முன்பு உலகம் இந்தியாவை கேவலமாகப் பார்த்தது. செய்தித்தாள்களில் தினந்தோறும் ஊழல் செய்திகள் வந்தன. உலக அரங்கில் இந்தியா இன்று வலுவான நாடாகப் பார்க்கப்படுகிறது. விண்வெளித் துறையில் பாரதத்தை வழிநடத்துவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. தமிழக இளைஞர்கள் இந்தியப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள். உடான் திட்டத்தின் கீழ் வேலூரில் விமான நிலையம் அமையவுள்ளது. சென்னை, பெங்களூரு தொழில் முனையம் வேலூர் வழியாகச் செல்கிறது.
இந்தியா வல்லரசாக மாறி கொண்டிருப்பதில் தமிழகத்தின் பங்கு முக்கியமானது. வளர்ச்சி அடைந்த இந்தியாவின் தலைமைப் பொறுப்பை தமிழ்நாடு ஏற்க வேண்டிய நேரம் இது.
ஆனால் இன்று, முழு திமுகவும் ஒரு குடும்பத்தின் நிறுவனமாக மாறிவிட்டது. திமுகவின் செயலால் இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன.
மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை திமுக அரசு, ஊழல் செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாமல் உள்ளனர். திமுக.,வினர் அனைத்திலும் அரசியல் செய்கின்றனர்.
உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியைக் கற்று வருகிறேன். திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் கட்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள். இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்திருக்கிறோம். தமிழகம் பெண் சக்தியை ஆதாரிக்கும் பூமி; ஆனால் இண்டியா கூட்டணியினர் பெண்களை அவமதிக்கின்றனர்.
பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுக.,வும், காங்கிரசும் முன்னணியில் இருக்கின்றனர். ஏப்.19ல் பாஜக., கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கானது
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட மூன்று தகுதிகள் வேண்டும். ஒன்று, மிகப் பெரிய அரசியல் குடும்பத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். அடுத்து, ஊழல் செய்திருக்க வேண்டும். மூன்றாவது, தமிழ்க் கலாசாரத்தை எதிர்க்க வேண்டும்.இந்த மூன்றை வைத்துக் கொண்டு தமிழகத்தை தி.மு.க., பின்னோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
ஊழல் செய்வதில் திமுக காப்புரிமை பெற்று இருக்கிறது. மத்திய அரசு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழகத்திற்கு வழங்கி உள்ளது. ஆனால் திமுக., மணற் கொள்ளை, ரூ.4,300 கோடி ஊழல். போதைப் பொருள் விற்பனையில் சிறு குழந்தைகள் கூட விட்டு வைக்கவில்லை. வரும் மக்களவைத் தேர்தலில் திமுக.,வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்… என்று பேசினார்.