தெற்கு ரயில்வேயில் உள்ள நீராவி இன்ஜின் ரயில் 163 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டது. மக்கள் இதனைப் பார்த்து, பயணித்து மகிழ்வதற்காக கடந்த 3 ஞாயிற்றுக்கிழமைகளில் எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்பட்டது. இதற்கு நல்ல வரவேற்பு இருந்ததால் இன்றும் இந்த ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீராவி இன்ஜின் சிறப்பு ரயில் இன்று சென்னை எழும்பூரில் இருந்து கோடம்பாக்கம் வரை இயக்கப்படும். எழும்பூரில் காலை 10 மணிக்குப் புறப்பட்டு 10.30 மணிக்கு கோடம்பாக்கம் சென்றடையும்.
பெரியவர்களுக்கு 650 ரூபாயும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 500 ரூபாயும் கட்டணம் வசூலிக்கப்படும். குறைவான இருக்கைகள் இருப்பதால் முதலில் வருவோருக்கு முன்னுரிமை அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்படும். ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக டிக்கெட் கவுன்ட்டர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.