அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பெரும்பாலானோர் பண வெறி பிடித்து சுயநல நோக்கத்தில் தன்னிச்சையாக பதவி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து வரும் ஊழல் அட்டகாசத்தால் தனியார் கல்வியில் மாணவர்களின் மரண ஓலங்கள் உருவாகியுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி, எஸ்.வி.எஸ்., யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியை சேர்ந்த, மூன்று மாணவியர், மர்மமான முறையில் இறந்தனர்.
எஸ்.வி.எஸ்., கல்லுாரியை, சட்டவிரோதமாக இயங்க வைத்த துறை அதிகாரிகளை தண்டிப்பதுடன், பாதிக்கப்பட்ட மாணவ, மாணவியருக்கு நஷ்ட ஈடு மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும்’ என, எஸ்.வி.எஸ்., கல்லுாரி மாணவர்கள், நேற்று கோரிக்கை விடுத்தனர்.
இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்களின் மரண ஓலங்கள் தனியார் கல்வி மயம் ஊழல் உச்சத்துக்குக் சென்றுள்ளது என்பதையே வெட்ட வெளிச்சமாக காட்டுகிறது .
இந்த நிலையில் மதுரையில் “மாணவர்களின் மரண ஓலங்களும் அரசின் கொள்கைளும்: தொடரும் உரிமை மீறல்கள் – நமது பதிலென்ன?” என்ற தலைப்பில் சமம் குடிமக்கள் சார்பில் கலந்தாய்வு கூட்டம். 27-ம் தேதி நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களும்
நிறைவேற்றப் பட்டது.
கூட்டத்துக்கு மூட்டா அமைப்பின் முன்னாள் தலைவர் பேராசிரியர் விஜயகுமார் தலைமை வகித்தார். சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் சி.சே. இராசன் முன்னிலை வகித்தார். முனைவர் வ. அருள்ராஜ் அகில இந்திய மாணவர் சங்கத்தின் ஹரி, சட்டப்பஞ்சாயத்து அமைப்பின்சார்பில் ஜெகநேசன், சமம் குடிமக்கள் இயக்கத்தின் மண்டல அமைப்பாளர் சசிகலா உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தின் தொடக்கத்தில் ஹைதராபாத் பல்கலை மாணவர் ரோஹித் மற்றும் விழுப்புரம் தனியார் யோகா மருத்துவக்கல்லூரி மாணவிகள் பிரியங்கா. மோனிஷா, சரண்யா ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்வர்கள் பேசியதாவது :-
மாணவ, மாணவியர் தற்கொலையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சமூக மாற்றத்துக்கான கருவி எனக் கருதப்படும் கல்வியை காசுக்கு விற்கும் போக்கு ஒரு சமூகத்தை, நாட்டைச் சீரழித்துவிடும். கல்வியை தனியார் மயமாக்கியதால் ஊழலும் உச்சத்துக்குச் சென்றுள்ளது.
சாதிய பாகுபாடும் கல்வி வியாபாரமாகுதலுமே இன்றைக்கு மாணவ, மாணவியரைத் தற்கொலையின் விளிம்புக்குக் கொண்டு போய் நிறுத்துகிறது. கல்வி வியாபாரமானதால் சமூக சீரழிவும் மாணவ, மாணவியர் மத்தியில் ஏற்றதாழ்வும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும் எனப் பேசியவர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்களாவது :-
இறந்த மாணவர் ரோஹித்துடன் பல்கலைகழகத்தை விட்டு இடைநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் நிபந்தனையின்றி சேர்த்துக் கொள்ளவேண்டும்.
பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதன் மூலம் மாணவர் ரோஹித்தின் மரணத்துக்குக் காரணமான மத்திய மனித வளமேம்பாட்டுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்படவேண்டும்.
கல்வியில் தனியார் மயம் வலுப்பெற்று வருவதால் ஊழல் மலிந்து ஏழைகளும் அடித்தட்டு மக்களும் உரிய கல்வியை இலவசமாக பெற இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்.
விழுப்புரம் யோகா மருத்துவக் கல்லூரி மாணவிகள் தற்கொலைக்கு தார்மீகப் பொறுப்பு சுமத்தி தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பணிநீக்கம் செய்யப்படவேண்டும்.
எஸ்.வி.எஸ். கல்லூரிக்கு சாதகமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கல்வியை அனைத்து மட்டத்திலும் அரசு இலவசமாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தத் தீர்மானங்களை வலியுறுத்தி பிப். 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.
கலந்தாய்வு கூட்டத்தில் சமம் குடிமக்கள் இயக்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சண்முகவேல் நன்றி கூறினார்