பொங்கல் திருநாள் தமிழகத்தில் கோலாகலமாகக் கொண்டாடப் படுகிறது. உலகெங்கும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருநாளை பெருவிழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
தமிழ் வருடத்தில் தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப் படுகிறது. மார்கழி மாதத்தின் பனிக்காலம் முடிந்து, தை மாதம் முதல் நாள் தொடங்கி பயிர்கள் செழித்து வளர விவசாயம் சிறப்புற தொடக்க நாளாக அமைகிறது.
சூரியனின் தேர்க்கால் வடக்கிலும் தெற்கிலும் நகர்ந்து செல்லும் முதல்நாளாக, ஆடி மாதத்தின் முதல் நாளும் தை மாதத்தின் முதல் நாளும் அமைகிறது. அதை தட்சிண அயனம், உத்தர அயனம் என்று இரு பகுதிகளாகப் பிரித்திருக்கிறார்கள்.
ஆடி மாதத்தில் விதைக்காலம் துவங்கும். ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள். தட்சிணாயன காலம் எனப்படும் தெற்கு வழிக் கால் தொடங்கும் முதல் நாள் ஆடி மாத முதல் நாள். தொடர்ந்து உத்தராயன காலம் எனப்படும் தை மாத முதல் நாளில் சூரியனின் வடக்கு நோக்கிய பயணம் தொடங்கும்.
இது அறுவடைத் திருநாள் என்றும், அறுவடைக்கான காலத்தின் தொடக்கம் என்றும் கூறப்படும். எனவே, உழவர்கள் பயிர் விளைச்சலுக்குக் காரணமாக அமைந்த சூரிய பகவானுக்கு மனம் நிறைந்த மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளிப்படுத்தி பொங்கலிட்டு, படையல் செய்வார்கள்.
இன்று மகிழ்ச்சியும் மன நிம்மதியும் பெருக பொங்கலிட்டு, குலவையிட்டு, கதிரவனுக்குப் பொங்கல் இட்டு தமிழகத்தின் கிராமங்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் விழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.