வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக., தலைமயிலான கூட்டணியில் இடங்கள் தொடர்பாக தேமுதிக முக்கிய நிர்வாகிகள் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக., கட்சி தலைமை அலுவலகத்தில் சுதீஷ் தலைமையில் ஆலோசனை நடத்தப் பட்டு வருகிறது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பைத் தொடர்ந்து, அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக கூட்டணியில் 10 தொகுதிகளை தேமுதிக கேட்பதால், இழுபறி நிலை நீடிப்பதாகக் கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி, கடலூர் தொகுதிகளை தேமுதிகவிற்கு கொடுக்க பாஜக வலியுறுத்துவதால் இழுபறி நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, கடந்த முறை தே.ஜ.கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டபோது அதிக தொகுதிகளில் நின்றதையும் தற்போது 10க்கும் குறையாமல் பெற வேண்டும் என்றும் பேச்சு நீடிக்கிறது. ஆனால், கடந்த முறை விஜயகாந்த் உடன் இருந்த பலர் இப்போது இல்லை என்பதும், கட்சி கரைந்து போய், விஜயகாந்த் என்ற ஒற்றை மனிதருக்கான செல்வாக்கை வைத்து உள்ளது என்றும் கூறப் படுகிறது.
ஆயினும், பாமக., பெற்ற தொகுதிகளைக் காட்டிலும் குறைவாகப் பெற தேமுதிக சம்மதம் தெரிவிக்கவில்லை. அடுத்து, மாநிலங்களவை உறுப்பினர் தொகுதியும் ஒன்று கேட்டிருந்தது என்றும் அது பாமக.,வுக்கு அளிக்கப் பட்டதால், தேமுதிக தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
நாற்பது தொகுதிகளில் தற்போது வரை பாஜக., பாமகவுக்கும் உதிரிக் கட்சிகளுக்கும் என 15 தொகுதிகள் சென்றாலும் 5 தொகுதிகள் மட்டுமே தேமுதிக.,வுக்கு ஒதுக்கும் நிலையில் அதிமுக., தரப்பு உள்ளது. அதிமுக., கடந்த முறை 37 தொகுதிகளில் வென்றது. தற்போது கூட்டணி என்பதால் பாதி இடங்களைக் குறைத்துக் கொண்டு, குறைந்த பட்சம் 20 தொகுதிகளிலாவது போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் அதிமுக., உள்ளது.
அதேபோல், திமுக., கூட்டணியில் காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற பேச்சு எழுந்துள்ளது. எனில், திமுக.,வும் 20க்குக் குறையாமல் போட்டியிட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளது. மதிமுக., விடுதலை சிறுத்தைகள், இரு கம்யூனிஸ்ட்கள், முஸ்லிம் கட்சிகள் ஆகியவற்றுக்கும் மீதமுள்ள தொகுதிகளில் ஒதுக்கியாக வேண்டும்.
ஏற்கெனவே திமுக., கூட்டணியில் பாமக.,வுக்கு 5 இடங்கள் வரை கொடுப்பதாகவும், அதனாலேயே காஞ்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க முடியாது என்றும் திமுக., கூறி வந்தது. அதன்படியே பாமக.,வுக்கு ஒதுக்கி வைத்திருந்த தொகுதிகள் எல்லாம் இப்போது காங்கிரஸுக்கு அளிக்க திமுக., முன் வந்துள்ளது. எனவே தேமுதிகவுக்கு திமுக., கூட்டணியில் இடம் அமையாது என்பதும், அது கேட்கும் தொகுதிகள் கிடைக்காது என்பதும் வெளிப்படையாகக் கூறப்பபடும் தகவல்கள்!
எனவே தேமுதிக,.வுக்கு அடுத்த வாய்ப்பாக, மூன்றாவது அணிதான் முன்நிற்கும்! அதனை ஏற்கெனவே சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் சூடுபட்ட விஜயகாந்த் இப்போது அதை விரும்புவாரா என்பது சந்தேகமே!