இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு, தமிழகத்தில் முருகன் ஆலயங்களில் பரவலாக பக்தர்கள் பெருமளவில் குவிந்தனர்.
தமிழகத்தின் அறுபடை வீடுகளில் முக்கிய படைவீடான திருச் சீரலைவாய் என்று போற்றப் படும் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் வைகாசி விசாகத் திருவிழாவை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரம் என்பதால் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு தீபாராதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
இரவு முதல் பாதயாத்திரையாக குவிந்த பக்தர்கள் காவடி எடுத்தும், வேலால் அலகு குத்தியும், நேர்த்திக் கடன் செலுத்தினர். வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு முருகன் கோவில்கள் பெருமளவில் பக்தர்கள் குவிந்தனர். மதுரை திருப்பரங்குன்றம், பழமுதிர்ச்சோலை, பழனி மற்றும் சுவாமிமலை, திருத்தணி என அறுபடை வீடுகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப் பட்டது.