நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் உள்ளார். நடிகை காயத்ரி ரகுராம் பாஜக.,வில் உள்ளார். இருவருமே டிவிட்டரில் பிரபலமாக உள்ளனர். இருவருக்கும் ஃபாலோயர்ஸும் அதிகம். விவாதிப்பவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.
அன்றாட நிகழ்வுகள் குறித்து இருவரும் அடிக்கடி டிவிட்டரில் மோதிக்கொள்வதும் இப்போது சகஜமாகி விட்டது. முன்னர் காங்கிரஸுக்கு ஐடி விங் தலைவியாக இருந்தார் திவ்யா ஸ்பந்தனா என்ற குத்து ரம்யா. அப்போதும் காரசார விவாதங்கள் களை கட்டின.
தற்போது இருவருக்கும் ஒரு கருத்து மோதல் ஏற்பட்டது. அது கட்சியையும் தாண்டி, மத ரீதியாகச் சென்று கொண்டிருந்தது. குஷ்பு இசுலாமியராக பிறந்திருதாலும், சுந்தர்.சி.,யை திருமணம் செய்து கொண்ட பின்னர் கலாசார ரீதியாக மாறியுள்ளார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்தில் இளைஞர் ஒருவரை சிலர் பிடித்து வைத்து ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷம் இடும் படி அடித்த காட்சி இணையதளத்தில் வைரலாக்கப் பட்டது. இந்த வீடியோ குறித்து இருவரும் ஒருவருக்கொருவர் கருத்துப் பரிமாற்றம் என்ற பெயரில் மோதலில் ஈடுபட்டனர்.
இதற்கு பதில் அளித்த காயத்ரி ரகுராம், “இந்துக்களைக் கொலைகாரர்களாக சித்திரிப்பது இப்போது டிரண்டாகி விட்டது. மற்ற மதத்தினர் தவறு செய்யும்போது குஷ்பு வாய் திறப்பதே இல்லையே ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
ஆனால் இதற்கு பதில் அளிப்பது போல் பெயர் குறிப்பிடாமல் குஷ்பு பதில் அளித்தார். அது என்ன விவரம் என்று தெரியாமல் டிவிட்டர் வாசிகள் கொஞ்சம் குழம்பித்தான் போயினர்.
அதற்கு பதிலளித்த காயத்ரி ரகுராம், “நீங்கள் என் மதத்தை இழிவு செய்தால் நான் சும்மா இருக்க மாட்டேன். மரியாதையாக பேசக் கற்றுக் கொள்ளுங்கள். தனிப்பட்ட முறையில் உங்கள் மீது எனக்கு ஒன்றும் பகை இல்லை” என்று கூறினார்.