தேமுதிக தலைவர் விஜயகாந்த் குடும்பத்துடன் இன்று காஞ்சிபுரத்துக்கு வந்து அத்திவரதரை தரிசித்தார்.
40 வருடங்களுக்கு ஒருமுறைதான் அனந்த சரஸ் குளத்தில் இருந்து வெளியில் வந்து, அன்பர்களுக்கு தரிசனம் தருகிறார் என்பதால், அத்திவரதர் உத்ஸவம் சிறப்பாகக் கருதப் பட்டு, காஞ்சி நகரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. பெருமளவிலான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக காஞ்சிக்கு வருகின்றனர்.
பொதுமக்கள் மட்டுமல்லாது, விஐபி.,க்கள் அரசியல்வாதிகள் என பலரும் காஞ்சிக்கு படையெடுத்து வருவதால், நகரில் மக்கள் நெரிசல் அதிகரித்துள்ளது.
இத்தகைய சிறப்பு பெற்ற அத்திவரதரை தரிசிப்பதற்காக, விஜயகாந்த், தனது குடும்பத்தினருடன் இன்று காலை காஞ்சிபுரத்துக்கு வந்திருந்தார்.
காலை 9.30 மணி அளவில் பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன், சுதீஷின் மனைவி என விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் கோயிலுக்கு வந்தார்.
விஜயகாந்தை கைத்தாங்கலாக கோயிலுக்கு உள்ளே அழைத்து வந்தனர். விஜயகாந்த் சற்றே நின்று தள்ளாடியபடி வந்தார். அவரை வரிசையில் நின்று கொண்டிருந்த பக்தர்கள் பலர் ஆர்வத்துடன் பார்த்து மகிழ்ந்து, செல்போனில் வீடியோ போட்டோ என எடுத்தனர். கூடியிருந்த பக்தர்களைப் பார்த்து உற்ஸாகம் அடைந்த விஜயகாந்த், அவகளை நோக்கி புன்முறுவலுடன் சிரித்து அன்பை வெளிப்படுத்தினார்.
சில நேரம் அன்பர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவித்தார். அத்திவரதர் முன்னர் விஜயகாந்துக்காக சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது. விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் மித்ரன் படத்தின் பெயர்ப் பலகையும் அத்திவரதர் சந்நிதியில் வைத்து ஆசி பெறப் பட்டது.