காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது! ஒவ்வொரு நாளும் அத்தி வரதரை தரிசிக்க இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருகின்றனர். இதனால் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது!
பாதுகாப்பில் போலீசாரால் அதிகம் ஈடுபட முடிவதில்லை! பாதுகாப்பு கருதி பல்வேறு இடங்களில் போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி திருப்பி விட்டாலும் கூட்டம் கட்டுக்கு அடங்கவில்லை. இதனால் விஐபி, விவிஐபி என்று பல்வேறு வழிகளை ஏற்படுத்தி போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த நினைத்தாலும், அரசியல் கட்சியினர் கட்சிக் கரைவேட்டிகளுடன் கட்சிக் கொடிகளுடன் விஐபி தரிசன வாசலில் நின்றுகொண்டு போலீசாருடன் வாக்குவாதம் செய்து தாங்கள் விரும்பிய நபர்களை அனுப்பி வைக்கின்றனர்! இதனால் அரசியல் கட்சியினருக்கும் போலீசாருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது!
தாங்கள் பணிக்குச் செல்வதாகவும் தங்களை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும் அர்ச்சகர்கள் போலீசாரை குற்றம்சாட்டினார்! இதை அடுத்து எழுந்த பதற்றத்தை தணிக்க, அதிகாரிகள் அவர்களுக்கு இடையே தலையிட்டு சமரசம் செய்து வைத்தனர்!
அதிகாரிகளின் சமரசத்தால் சமாதானமடைந்த அர்ச்சகர்கள் பிறகு அத்திவரதர் கைங்கரியத்திற்கு உள்ளே சென்றனர்! இது இன்று காலை காஞ்சிபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது! இதனால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அத்திவரதர் பொதுமக்கள் தரிசனம் பாதிக்கப்பட்டது!
மதுரை வரிச்சியூரைச் சேர்ந்த ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று அத்திவரதர் தரிசனத்துக்காக விவிஐபிகள் அமர்ந்து தரிசனம் செய்யும் இடத்தில் சகாக்களுடன் இருந்தார்! அவருக்கு அர்ச்சகர்கள் சிறப்பு தரிசனம் செய்து வைத்தனர்! இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது!
அப்போது, கால் கடுக்க காத்திருந்து அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு விரைவில் தரிசனம் கிடைப்பதில்லை! மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது. ஆனால் ரவுடிகளுக்கும் போலீசாருக்கு வேண்டியவர்களுக்கும் உடனடியாக விவிஐபி சிறப்பு அந்தஸ்துடன் தரிசனம் கிடைக்கிறது என்று பொதுமக்கள் தங்கள் மனக் குமுறலை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தி இருந்தனர்
[videopress 1ud9MtFf]
இந்த வீடியோக்கள் காவல்துறை மட்டத்தில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது! இது குறித்த புகார்களும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையாவுக்கு அதிகம் சென்றன.
மதுரை சென்னை உள்ளிட்ட இடங்களில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் வரிச்சியூர் செல்வத்தின் மீது உள்ளன. இந்நிலையில் போலீசாரால் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள ஒரு ரவுடி அத்தனை போலீசார் கண்காணிப்பையும் மீறி எப்படி அத்திவரதரை தரிசிக்க உள்ளே வர முடியும் என்று பலரும் கேள்வி எழுப்பினர்! இந்தக் கேள்வி காவல்துறை டிஜிபி வரையிலும் எதிரொலித்தது. இது குறித்தும் ஆட்சியர் விசாரணை நடத்தினார்.
தங்களது செல்வாக்கைக் காட்ட விரும்பும் சிலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து விவிஐபி.,க்களுக்கான பாஸ் பெற்று, தங்களுக்கு வேண்டியவர்களை அனுப்பி வைப்பதால், இது போன்று குளறுபடி நடக்கிறது என்று கூறப் படுகிறது. போலியான பாஸ்களை பயன்படுத்தியும், போலியான பெயர்களில் பாஸ்களைப் பெற்றும் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் அளிக்கப் பட்டன.
போலீஸ் உயரதிகாரிகள் உதவியுடன் ரவுடி வரிச்சியூர் செல்வம் நேற்று அத்திவரதரை தரிசித்ததாக செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த ஆய்வு டிஜிபி முன்னிலையில் நடைபெற்றது என்று கூறப்படுகிறது.
இதனால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுவதால் டிஜிபி போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதாகவும் அதன் காரணத்தாலேயே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது!