அவர்களும் நெல்லை மாவட்ட பரப்பளவு உள்ளிட்ட சில விவரங்களை முதல்வருக்கு எடுத்துக் கூறியுள்ளனர். அதேபோல செங்கல்பட்டும் தனி மாவட்டமாக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென்காசி தற்போது முதல் நிலை நகராட்சியாக உள்ளது. நிர்வாக வசதிக்காக தென்காசியை தனி மாவட்டமாக்கலாம் என முடிவெடுக்கப்பட்டதாம். இதையடுத்து அதற்கான அறிவிப்பை சட்டப்பேரவையில் முதல்வர் வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது.
மேற்கு தொடர்ச்சி மலையோரம் இயற்கை எழில் சூழும் நகரமாக அமைந்துள்ளது தென்காசி. அருகாமையில் குற்றாலம் உள்ளதால் எப்போதும் பரபரப்பான ஊராக இருந்து வருகிறது தென்காசி. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வரத்தும் அதிகமாக உள்ளது.
தென்காசியை மாவட்டமாக்கினால் அதன் கீழ் சிவகிரி, அம்பாசமுத்திரம், செங்கோட்டை ,கடையநல்லூர் ஆகிய வட்டாரங்கள் வரும்.
ஏற்கனவே கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்தார் முதல்வர்.அது அறிவிப்போடு நின்றுவிட்டது அதற்கு பிறகு விழுப்புரம் மாவட்டத்தை பிரிப்பதற்கான எந்த பணிகளையும் வருவாய் துறை மேற்கொள்ளவில்லை. அதேபோல் தென்காசியையும் அறிவிப்போடு விட்டு விடக் கூடாது என்பது அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.
இதற்கிடையே, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டை தனியாகப் பிரித்து மாவட்டமாக அறிவிக்கும் திட்டமும் அரசிடம் உள்ளதாம். ஏற்கனவே செங்கல்பட்டு எம்ஜிஆர் மாவட்டம் என்று இது இருந்தது. இதற்குள் காஞ்சிபுரம் வந்தது. பின்னர் இதை மாற்றி காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்றப்பட்டது.
இதுகுறித்தும் இன்று சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பார் எனத் தெரிகிறது. அதேபோல கும்பகோணமும் தனி மாவட்டமாக அறிவிக்கப்படலாம் என ஒரு அனுமானம் உள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.