“வேதத்தை சரியாக உச்சரிக்க வேண்டும்”
(அவர் தவறு செய்தார்’ என்று சுட்டிக் காட்டாமலே இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில் வல்லவர் பெரியவா.)
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நியமாத்யயன வித்யார்த்தி ஒருவன்.
(வேதம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரின்வீட்டிலேயே
தங்கியிருந்து வேதம் கற்றுக்கொள்ளும் மாணவன்)
அவன் பயின்ற வேதத்தில் ஒரு பகுதியை சொல்லச்
சொன்னார்கள் பெரியவாள். ஒரு சிறு பகுதியை
மீண்டும் மீண்டும் சொல்லச் சொன்னார்கள்.
அருகிலிருந்தவர்களுக்கெல்லாம் விநோதமாக
இருந்தது.அந்த வேத வாக்கியங்களில் தனிச்சிறப்பாக
ஏதுமில்லை.பின், ஏன் திரும்பத் திரும்பச் சொல்லச்
சொல்கிறார்கள்?
அந்த பையனுடைய தகப்பனாரேதான் அவனுக்கு
ஆசிரியர். அந்த ஆசிரியரையும் அதே பகுதியை
சொல்லச் சொன்னார்கள் பெரியவா.
அவரையும்,பல தடவை,அந்தப் பகுதியை
சொல்லச் சொன்னார்கள்.
திகைப்பு.மௌனம்.
“அந்த மந்திரத்தில் (வாக்கியத்தில்) ‘த்’ என்று
ஒரு எழுத்து தொக்கி நிற்குமே? அதைப் பையன்
சொல்லவில்லையே? நீங்களும் கவனிக்கவில்லை
போலிருக்கு….”
ஆசிரியர் (கொஞ்சம் வெட்கத்துடன்) நெளிந்தார்.
ஏனென்றால்,அவருக்கும் அந்த ‘த்’ மனப்பாடம்
ஆகவில்லை!.
பெரியவாள், ‘அவர் தவறு செய்தார்’ என்று சுட்டிக்
காட்டி,அவர் மனத்தை புண்படுத்தவில்லை.
அத்துடன் ‘த்’ என்ற தொக்கி நிற்கும் சொல்
இல்லாமலே,பரம்பரையாக பாடம் ஏற்பட்டுவிட்டால்
பின்னால், கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.
மேலும்,வேத வாக்கியத்தை சரியாக உச்சரிக்காத
குற்றமும் (பாவமும்) வந்து சேரும்.
இரும்புக் கட்டியை பூப்பந்தாக்குவதில்
வல்லவர் பெரியவா.