தெலுங்கில் பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்
உலகமனைத்தும் ஆச்சர்யமடையும் நம் நாட்டு வழிபாட்டு மூர்த்திகளுள் நடராஜ விக்கிரகமும் ஒன்று. சிவனின் உபாசனை மூர்த்திகளில் நடராஜ மூர்த்தி மிகச் சிறப்பானது. இவரை தியானித்து வழிபடுபவர்கள் அனைத்து உயர்ந்த நிலைகளையும் அடைய பெறுவர் என்பது சாஸ்திர வசனம்.
“பிரபஞ்சம் முழுவதும் ஒரே லயத்திற்கு ஏற்ப அதிர்கிறது என்றும், அணுவின் ஆட்டத்தோடு தொடரும் விஸ்வம் முழுமையும் ஒரே மகா சைதன்யத்தின் நர்த்தனமென்றும்” தன் விஞ்ஞான அறிவின் உச்சத்தால் கிரகித்தறிந்த புகழ் பெற்ற மேல்நாட்டு விஞ்ஞான சாஸ்திர நிபுணர் ‘டாக்டர் எப். காப்ரா’ என்பவர், தன் Tao of the Physics என்ற நூலில் ‘இதனைத்தும் ஒரு ‘Gigantic Cosmic Dance’ என்று வர்ணித்துள்ளார். “I know that this was the ‘Dance of Siva’, the Lord of Dancers, worshiped by the Hindus” என்று நடராஜ மூர்த்திக்கு வந்தனங்களை சமர்ப்பித்துள்ளார்.
விஸ்வத்தின் ஒவ்வொரு பரமாணுவிலும் நடைபெறும் ஸ்பந்தனம் (அதிர்வு) ஸ்ருஷ்டி, ஸ்திதி, லய வடிவாக நடைபெறும் சிவநாட்டியமே. அந்த விஸ்வ சைதன்ய ‘ஸ்பந்தன’ சக்தியையே நம் மகரிஷிகள் தம் தவத்தின் சமாதி நிலையில் நடராஜ ஸ்வாமியாக தரிசித்தார்கள்.
Kenneth Ford என்ற விஞ்ஞான சாஸ்திர நிபுணர், சிவ நாட்டியத்தை அணுக்களில் நிகழும் ‘விஸ்வ சைதன்ய நர்த்தனம்’ (Energy dance) என்று புகழ்ந்து வர்ணித்து இவ்விதம் கூறியுள்ளார்: “The Metaphor of Cosmic dance has found its most profound and beautiful expression in Hinduism in the image of Dancing of God Siva”.
சப்தம், ஒளி இவை நாமமும் ரூபமும் கொண்டவை. இவ்விரண்டுமே விஸ்வமெங்கும் வியாபித்து உள்ளன. இவற்றுக்கு மூலமானதும், இவற்றை இயக்குவதுமான சைதன்யம் தானேயென்று தெரிவித்தபடி, டமருவையும் அக்னியையும் தன் கரங்களில் தரித்து அபய ஹஸ்தத்தோடும் ஆடும் ஹஸ்தத்தோடும் அபயத்தையும் லீலையையும் அருளுபவனாக வெளிப்பட்டு, இடது பாதம் தூக்கி, ‘சக்தியின் ஸ்பந்தனம்’ என்று உணர்த்தி, ‘அபஸ்மார அசுரனை’ மர்த்தனம் செய்து நிற்கும் சிவ நாட்டிய மூர்த்தி அநேக உயர்ந்த தத்துவங்களை விளக்கிக் காட்டுகிறார். ஒரு காதில் மகர குண்டலம், மறு காதில் தாடங்கம் அணிந்து சிவ சக்தி ஒற்றுமையை எடுத்துக் காட்டுகிறது நடராஜ விக்கிரகம்.
‘ஆர்படீ’ விருத்தத்தில் செய்யும் உத்தமமான தாண்டவம் – ஆனந்த, பயங்கர, தீவிரங்களுக்கு இருப்பிடமாக வெவ்வேறு விதங்களில் பரவியுள்ளது. ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், கஜாசுர சம்ஹார தாண்டவம், ஊர்த்துவ தாண்டவம்….இவ்விதம் வெவ்வேறு தாண்டவங்கள் சிருஷ்டி, ஸ்திதி, லய லீலைகளுக்குச் சின்னங்கள். ஆதி சக்தி, ‘கைசிகீ’ விருத்தத்தில் செய்யும் லாஸ்யம், ஆதி தேவனின் தாண்டவம் இவ்விரண்டே சராசர ஜகத்தின் அசையும் சக்திகள்.
நடராஜ மூர்த்தியில் முத்திரை, யந்திரம், தத்துவக் குறியீடுகள் பல மறைந்துளளன. ஒரு ஒளி மண்டலத்தின் மத்தியில் நடராஜ விக்கிரகம் அமைந்துள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நான்கு கைகளோடு கூடிய நடராஜர் தன் வலது பாதத்தின் கீழ் ஒரு அசுரனை மிதித்துள்ளார். இடது பாதத்தைத் தூக்கி கொஞ்சம் வளைத்து வைத்துளளார். இதனையே ‘குஞ்சித பாதம்’ என்கிறோம்.
நான்கு கைகளில் ஒரு கையில் டமரு, மறு கையில் அக்னி தரித்துளளார். மீதி இரண்டு கைகளில் இடது கை கீழ் நோக்கி இருக்கிறது. அது குஞ்சித பாதத்தைக் காட்டுகிறாற் போலிருக்கிறது. வலது கை அபய ஹஸ்தம்.
‘டமரு’, அதிர்வு சக்திக்கு (ஸ்பந்தனம்) குறியீடு. ஸ்பந்தனமே ‘சிருஷ்டி ஆவிர்பாவ சொரூபம்’. ஆகையால் டமரு தாங்கிய ஹஸ்தம் படைப்புத் தொழிலுக்குச் சங்கேதம்.
அக்னி ஹஸ்தம், ‘சம்ஹார’ செயலுக்கு சங்கேதம். பூமியின் மேல் அசுரனை மிதிக்கும் பாதம், ‘திரோதான க்ருத்யம்’ எனப்படும் ‘மறைக்கும்’ தொழிலுக்குச் சங்கேதம். மேல் தூக்கிய குஞ்சித பாதம் ‘அனுகிரக க்ருத்யம்’.
இவ்விதமாக பல செயல்களை நிரூபிக்கும் பரமசிவ சொரூபமே நடராஜர். ஒளி மண்டலம் அணு மண்டலத்திற்கும், பிரம்மாண்ட மண்டலத்திற்கும் சங்கேதம். ஒவ்வோர் அணுவிலும் மற்றும் பிம்மாண்டத்திலும் நிரந்தரம் நிகழும் சைதன்யமே நடராஜ தத்துவம்.
விஸ்வமெங்கும் லய வடிவமான சைதன்யம் நிரந்தரம் நிகழ்கிறது. ஒவ்வோர் உதயமும் அஸ்தமனமும் ஒரு லயம். ஒவ்வொரு கணத்திலும், ஒவ்வொரு துகளிலும் லயம் உண்டு. தேசமும் காலமும் லய வடிவானவை. சைதன்ய சுபாவமே லயம். இந்த லயத்தின் விளையாட்டே கால சைதன்யம். லயத்திற்கு காரணமான காலகாலன் நடராஜன்.
நிரந்தரம் நகரும் இயல்பு கொண்ட ஜகத்தின் விளையாட்டே நாட்டியம். இது சிவ சக்திகளின் வடிவம். அதனால் தான் இடது காதுக்குப் பெண்களின் ஆபரணமாக தாடங்கமும் வலது செவிக்கு ஆண்களின் செவியாபரணமான மகர குண்டலமும் உள்ளன. இது சிவ சக்தி வடிவ அர்த்த நாரீஸ்வர சொரூபம்.
ஆகம சாஸ்திர விதிகளின்படி நடராஜ விக்கிரகம் இரண்டு யந்திரங்களை ஆதாரமாகக் கொண்டு நிர்மாணிக்கப்படுகிறது.
1.ஷட்கோண யந்திரம். 2. ஸ்ரீ சக்ர யந்திரம்.
‘ஊர்த்துவ முகம்’ எனப்படும் மேல் முகம் கொண்ட முக்கோணத்தோடு, ‘அதோமுகம்’ எனப்படும் கீழ்முகம் கொண்ட முக்கோணம் சேருகையில் ஏற்படுவதே ஷட்கோணம். ‘ஊர்த்துவ முக முக்கோணம்’ சிவனுக்கு அடையாளம். ‘அதோமுக திரிகோணம்’ சக்திக்கு அடையாளம்.
அதே போல் நான்கு ‘ஊர்த்துவ முக’ திரிகோணங்கள் (சிவ சொரூபங்கள்), ஐந்து ‘அதோமுக’ திரிகோணங்கள் (சக்தி ரூபங்கள்) சேருகையில் ஏற்படும் ஸ்ரீசக்ரம் கூட சிவ சக்தி இணைந்த வடிவமே.
இவ்விரண்டு யந்திரங்களின் சொரூபமே நடராஜ விக்கிரகம். சுற்றியுள்ள வளையத்தைக் கரங்கள் தொடுவது போலிருந்தால், ஷட்கோண யந்திரத்தால் நிர்மாணித்துள்ளார் என்றறியலாம். கரங்கள் வளையத்தைத் தொடாமல் மத்தியில் இருந்தால் ஸ்ரீசக்கர ஆதாரமாகத் தயார் செய்துள்ளனரென்று அறியலாம். மொத்தத்தில் நடராஜ விக்கிரக ஆராதனையே ஸ்ரீசக்ர ஆராதனையென்பது தெளிவாகிறது.
அதே போல் ஸ்வாமியின் வடிவத்தில் ந, ம:, சி, வா, ய – என்ற ஐந்து எழுத்துகளும் லீனமாகி உள்ளன. தீவிரமான ‘ஆர்படீ’ விருத்தத்தால் நடக்கும் தாண்டவம் சிவனுடையது. நளினமாக ‘கைசிகீ” விருத்தத்தால் நிகழும் ‘லாஸ்யம்’ உமாதேவியின் நிருத்தியம்.
இந்த லாஸ்ய, தாண்டவ விளையாட்டே ‘நாட்டியம்’. இந்த நாட்டியமே உமா மகேஸ்வர மயமான நடராஜ உபாசனை.
விஸ்வமனைத்தும் ஸ்வாமியின் சரீரம். ஒவ்வொரு சப்தமும் நாட்டியத்திற்கு சாகித்தியமே. அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் அலங்காரம் போன்ற ‘ஆஹார்யங்களே’. அதாவது நடனத்தின் ஒரு அடையாளமே.
உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனின் நடத்தையும் நடராஜனின் அபிநயமே. இதே கருத்து ‘நந்திகேஸ்வர காரிகை’ யில் துதிக்கப்படுகிறது.
ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் சர்வ வாஜ்மயம் |
ஆஹார்யம் சந்த்ர தாராதி தம் வந்தே சாத்விகம் சிவம் ||
சிவனின் கையிலுள்ள ‘டமரு’ சப்த சக்தியையும், அக்னி ஹஸ்தம் ஒளிச் சச்தியையும் அறிவிக்கின்றன. சப்தம் என்பது பெயர்களோடு கூடிய ஜகத்திற்கும், ஒளி என்பது ரூபத்தோடு கூடிய ஜகத்திற்கும் சங்கேதங்கள்.
நாம, ரூப வடிவான ஜகத்தினை இயக்கம் நாம, ரூபத்திற்கு அதீதனான பரமாத்மாவே ‘நடேஸ்வரன்’. ஜீவர்களின் இதயமாகிய ஆகாசத்தில் இருந்துகொண்டு அனைத்து அசைவுகளுக்கும் ஆதாரமாக உள்ள ஆத்ம சைதன்யமே நடராஜ சொரூபம். அந்த ‘தஹராகாசமே’ சிதம்பரம். இது சகல விஸ்வத்திற்கும் அதீதமானது, ஆதாரமானது.
‘நமஸ் ஸபாப்ய: சபாபதிப் யஸ்ய’ என்று வேதம், சபாபதியான சதாசிவனை துதிக்கிறது.
புலன்களின் குணங்கள் கூட்டமாகச் சேர்ந்த தேவ சபையே இந்த உடல். இதற்கு கேந்திரமான சித் சபை இதயம். அங்குள்ள பரஞ்சோதி, நடராஜர்.
நடேஸ்வரனின் மூர்த்தி ஞான சொரூபமான குரு தத்துவம். ‘சிதம்பரத்தில் நடனமாடும் தக்ஷிணா மூர்த்தியே நடராஜர்’ என்று போற்றலாம். தட்சிணா மூர்த்தி அசையாத தத்த்துவம். அவர் ‘அசலம்’. நடராஜர் அசையும் தத்த்துவமாகிய ‘சேதனா’ ஸ்வரூபம். ஸ்திர ரூபனான ‘ஸ்தாணு’ வும் சிவனே. நிரந்தர லயக்கார சைதன்யமும் சிவனே.
‘ததே ஜதி தன்னை ஜதி’ – ‘ அது நகருகிறது; அது நகர வில்லை’ என்று ‘அநிர்வசனீய’ ஆத்ம சைதன்யத்தை ஈஸாவாஸ்ய உபநிஷத் வர்ணிக்கிறது.
‘நட’ என்ற சொல்லுக்கு ‘ஸ்பந்தனம்’ (அதிர்வு) என்று பொருள். ஸ்பந்தனம், சைதன்யத்தின் இயல்பு. உலகில் விரிந்து பரந்துள்ள ஸ்பந்தன சக்தியே அனைத்து அசைவுகளுக்கும் மூல காரணம்.
அந்த ஸ்பந்தன சக்தியையே நாட்டியம் என்கிறோம். மனிதனின் அனைத்து பரிணாமங்களும், அனைத்து எண்ணங்களும் விஸ்வேஸ்வரனின் நாட்டியமே. இந்த எண்ணத்தோடு கவனித்தால் ‘சர்வம் சிவ மயம் ஜகத்’ என்ற தத்துவத்தின் ரகசியம் புரியும்.
தத் புருஷாய வித்மஹே தாண்டவேசாய தீமஹி
தன்னோ நடேச: ப்ரசோதயாத் ||
மூகம் கரோதி வசாலம் பங்கும் லங்கயதே கிரீம்
யத் க்ருபா தமஹம் வந்தே பரமானந்த மாதவம் ||