இரு தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் பேச்சை, அவரது பாணியிலேயே தமிழில் மொழிபெயர்த்துப் பேசி பிரதமர் உள்ளிட்ட அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார், சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சித் தயாரிப்பாளர் சுதர்ஸன்.
அவரது மொழிபெயர்ப்பில், ஓர் இடத்தில்… கவனித்தால் புரியும்.. மோதிஜி யூனியன் கவர்ன்மெண்ட் என்றார்… நம் சுதர்ஸனோ, இந்திய அரசு என்று தமிழாக்கினார். இன்னோரிடத்தில் மத்திய அரசு என்றார்…
ஆக… ஆக… யூனியன் என்றால் மத்திய.. இந்திய… என்றுதான் பொருள். இதனை நான் சமூகத்தளத்தில் பதிவிட்டபோது, பத்மா கணேஷ் என்பவர், ஆமாம் இவர் யார் என்று கேட்டார். அவருக்கு அளித்த பதிலில், நண்பர் சுதர்ஸனுடனான பழக்கத்தையும் அவரது திறமைகளையும் பற்றி பட்டியலிட்டேன். அதில்,
அவரது சாதனைகள் அதிகம். சுருங்கச் சொன்னால்… தமிழகத்தின் மோடியின் குரல்!ஆலிண்டியா ரேடியோ ப்ரோக்ராம் எக்ஸிக்யூடிவ்!
22 வருடங்கள் முன் நான் வானொலியில் பகுதி நேர அறிவிப்பாளராக இருந்த போது சென்னை வானொலியில் வைத்து பழக்கம். நான் மஞ்சரி இதழாசிரியராக இருந்த போது… அவர் கதைகளை நாவல்களை அழகிய குரலில் உணர்ச்சிபூர்வமாகப் படித்தார். அதைக் கேட்டு, வியந்தேன். அந்த நிகழ்ச்சி பெயர் புதினப் பக்கங்கள்… உடனே, அது குறித்து மஞ்சரி இதழின் கடைசிப் பக்கத்தில், உங்களோடு ஒரு வார்த்தை என்ற தலைப்பிலான எனது பகுதியில் பதிவு செய்தேன்.
சம்ஸ்க்ருத நிகழ்ச்சி பொறுப்பாளர், வானொலி நாடகப் பிரிவு பொறுப்பாளர், இசை நிகழ்ச்சிகள் தயாரிப்பாளர், ஹிந்தி டாக்ஸ் பொறுப்பாளர் என்று பல அவதாரங்கள் அவருக்கு. முக்கியமாக, உதகை, அந்தமான் வானொலி நிலையங்களிலும் பின்னாளில் பணி புரிந்து முத்திரை பதித்தார்.
சென்னை வானொலியில் ஹிந்தி நன்கு தெரிந்த … அதை உடனே தமிழாக்கத் தெரிந்த நபர்… சொல்லப் போனால் ஒரே நபர் இவர்தான்! குரல் – தேர்ந்த ப்ரொஃபஷனல் வாய்ஸ் – ஏற்ற இறக்கங்களுடன் கேட்போருக்கு உணர்ச்சிகரமாக உள்ளே ஏற்ற வைப்பவர்..!
பிரதமர் மோதியின் மனதின் குரல்… நிகழ்ச்சி தொடங்கிய முதல் எபிசோடில் இருந்து இத்தனை நாளும் அதை பிரதமர் மோதியைப் போலவே ஏற்ற இறக்கங்களுடன் வானொலியில் தமிழாக்கி, பேசியும் வருகிறார்… அதனால் தான் அவரை தமிழகத்தின் மோடியின் குரல் என்று சொல்வோம்..!
இப்போது சுதந்திரம் 75 – நமது எழுத்தில்… பிளாசி முதல் செங்கோட்டை வரை நிகழ்ச்சியை உணர்ச்சிப் பூர்வமாக தயாரித்து குரலில் சரித்திர நிகழ்வை நம் கண்களில் கொண்டு வந்துவிடுகிறார்…
பிரதமர் மோதி மன்கிபாத் தொடங்கிய போது, அவரது குரலில் கம்பீரம் இருந்தது. அதன் பின் அவரது அனைத்து ஹிந்தி உரைகளிலும் அதே கம்பீரமான வாய்ஸ் இருந்தது. ஆனால், இப்போது மோதிஜி கம்பீரப் பேச்சில் கொஞ்சம் தளர்ந்து காணப்படுகிறார்.! அண்மைக்காலமாக சில இடங்களில் உச்சரிப்பு தெளிவின்றி இருக்கிறது. வயதான காரணமாக இருக்கலாம்..! ஆனால் இவரோ அதே கம்பீரத்துடன் மோதிஜியின் வாய்ஸை தமிழக நேயர்களுக்கு அளித்துவருகிறார்….!
ஹிந்தியில் இருந்து செய்யும் தமிழாக்கத்தில்… பெரும்பாலும் மோதிஜியின் வீடியோ பார்த்து, அவரது வாயசைப்புக்கு ஏற்ப, தமிழ் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து… அதே ஏற்ற இறக்கங்களுடன் கொடுக்கும் போது… மோதிஜியே தமிழில் பேசும் உணர்வு நமக்கு ஏற்படும்… (அது ஜூனுன் தமிழல்ல)
அவரது பெயர் – ராமஸ்வாமி சுதர்ஸன்.
அனைவரையும் கவர்ந்த அந்த மொழிபெயர்ப்பு குறித்து, தினமலர் நாளிதழ் அவரிடம் பேட்டி ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில் அவர் இதன் பின்னணியை எடுத்துச் சொன்னார்.
பிரதமர் மோடி, இந்த நாட்டின் தவ புதல்வர். அவரது நல் எண்ணங்கள், செயல்பாடுகள், உணர்வுகளை தமிழக மக்களிடம் சேர்க்க ஏங்கினேன்.அந்த சமயத்தில் தான், என் குரல் ஆளுமையை தெரிந்து, மனதின் குரல்* நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் பொறுப்பை வழங்கினர்; அதைக் கேட்டு, பலரும் பாராட்டினர். ஒவ்வொரு மாதமும், ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி, தமிழகத்தில் பெரிய அளவில் மக்களை சென்றடைந்தது.
மோடியின் குரலாக, நான் தான் தமிழில் பேசுகிறேன் என தெரிந்து, நாமக்கல், தஞ்சாவூர், திருநெல்வேலி, துாத்துக்குடி என, பல ஊர்களில் இருந்தும், எனக்கு பலர் போன் செய்து பாராட்டினர்.
தற்போது மாவட்ட கலெக்டராக இருக்கும், முன்னாள் செய்தித் துறை இயக்குனர் பாஸ்கர பாண்டியன், என்னை 2020ல் தொடர்பு கொண்டார். ‘2020 நவ., 20ல், நல திட்டங்களை துவங்கி வைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சென்னை வருகிறார். அவரது உரையை, நீங்கள் தான் தமிழில் மொழிபெயர்க்க வேண்டும்’ என்றார். அப்பணியை சிறப்பாகவே செய்தேன். அமித் ஷா உள்ளிட்ட பலரும் பாராட்டினர்.
அதை தொடர்ந்து, 2021 பிப்., 14ல், நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் உரையை மொழி பெயர்த்து பேசினேன்.
‘சிறப்பு’ என பாராட்டியவர்கள், அடுத்ததாக அதே மாதம் 25ல், கோவை, ‘கொடிசியா’ அரங்கில் நடந்த மோடி நிகழ்ச்சிக்கும் அழைத்தனர். இப்படித் தான், மோடியின் குரலை, தமிழர்களிடம் உணர்வுகளோடு கொண்டு சென்றிருக்கிறேன்.
இது இறைவனின் அருட்கொடை. என் தந்தையுடன் படித்தவர்களுக்கு, இன்றைக்கு, 85 வயதுக்கு மேல் இருக்கும். அவர்கள், மோடியின் குரலாக நான் ஒலிப்பதை கேட்டு, என்னை புகழ்கின்றனர். அந்தப் பேறு, வேறு யாருக்கும் கிடைக்காதது.
கடந்த காலங்களில், பிரதமருக்காக மொழி பெயர்ப்பாளர்களை அமர்த்தி, அவர்களுக்கு, ‘டம்மி’யாக சிலரை நியமித்திருப்பர். மொழி பெயர்ப்பு சரியில்லாமல் போனால், ‘டம்மி’யை பயன்படுத்துவர். நான், பிரதமரின் பேச்சை மொழிபெயர்த்துப் பேசத் தொடங்கியது முதல், அந்த ஏற்பாடு இல்லை. மூன்று முறை, பிரதமர் மோடியின் உரையை மொழிபெயர்த்து பேசியுள்ளேன்.
ஒவ்வொரு முறையும், அவர் என்னை பாராட்டியதோடு, நன்றியும் கூறியுள்ளார். அவரது உரையை மொழி பெயர்த்து, அவரது நடையிலேயே ஏற்ற, இறக்கங்களோடு பேச, எனக்கு வாய்ப்பளித்த அவருக்கு நன்றி கூறி வருகிறேன். எத்தனை முறை மோடியின் பேச்சை மொழிபெயர்க்க வாய்ப்பு கிடைத்தாலும், அதை இறைவன் கொடுத்த கொடையாக நினைத்து, சிறப்பாக செய்வேன்… என்றார்.