“உங்களுக்கு அழைப்பிதழ் வந்ததா?” என்று ஒருவர் கேட்டபோது, “நான் ஊரில் இருந்திருந்தால் முதல் ஆளாக கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள்…” என்றேன்.
“அட… உங்களை அழைப்பதற்கு இல்ல… மற்றவர்களை அழைப்பதற்கு உங்களுக்கு வந்து சேர்ந்ததா? நீங்க அழைப்பிதழ் பெற வேண்டியவரா என்ன? அழைப்பு கொடுக்க வேண்டியவராயிற்றே…” சொல்லிவிட்டு அழைப்பிதழ்கள், ராமர் கோயில் படம், பூஜிக்கப்பட்ட அட்சதை பாக்கெட் கொஞ்சம் அனுப்பி வைத்தார்.
பன்னிரெண்டு வயதில் வீட்டில் ஒரு மரப்பெட்டி தயார் செய்து, அதை கோயில் கருவறை முகப்பு போல் வெட்டி ஒட்டி கதவு திரைத்துணி எல்லாம் போட்டு, நவராத்திரி கொலுவில் வைக்க வேண்டிய ராமர் சீதை லட்சுமணர் அனுமன் பொம்மைகளை வைத்து, அதன் கீழ் ’ஸ்ரீராம்’ என எழுதப்பட்ட 12 செங்கற்களை வைத்து நாற்பது நாள் பூஜை செய்து … வண்டியில் ஏற்றி பூப்போட்டு அனுப்பி வைத்த மனமெல்லாம் நிறைந்த கோயில், இதோ முப்பத்தைந்தாண்டு கால ஏக்கத்தினூடே எழும்பியிருக்கிறது. அதில் அன்று அடியேன் பூஜித்த மனபாவனையில் இன்று தான் அவதரித்த மண்ணில் ராமன் கோயில் கொள்ளப் போகிறான்.
நாம் மனக்கோயிலைக் கட்டி பூஜிக்கின்ற, பூசலார் நாயனாரைப் போன்ற எளிய பக்தர்கள்தான்! இப்போது நம்மிராமபிரான் மதிற்கோயிலில் குடிகொள்ளப் புகும் பிரதிஷ்டை நிகழ்வுக்கான அழைப்பிதழை மற்றவர்களுக்கும் கொடுத்து, ராமகாரியத்தில் நம்மையும் இணைத்துக் கொள்ள பெருவிருப்பம் கொண்டான் போலும்! அவன் விருப்பத்தை நிறைவேற்றி வருகிறேன்!
அயோத்தி ஸ்ரீராமர் ஆலய பிராணப்ரதிஷ்டைக்கான அழைப்பிதழ்களை ராமபக்தர்களுக்குக் கொடுத்து வருகிறேன்.
காட்டாங்குளத்தூர் பகுதியில் வசிக்கும் சங்கரகிருஷ்ண ச்ரௌதிகள் (கண்ணன் சாஸ்திரிகள்) சாமவேத உபாத்யாயர். ஆய்க்குடிதான் சொந்த ஊர். இங்கே வந்து வசிக்கிறார். இப்போது பார்வைக் குறைபாடு. வாசலில் இருந்து பெயரைச் சொன்னதும் சந்தோஷம் பொங்க வாங்கோ வாங்கோ என்றார். அவரிடம், அயோத்தி ராமர் கோயில் ஆலய அழைப்பும் அட்சதையும் கொண்டு வந்திருக்கிறேன் என்றதும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. பிஜேபி., அத்வானி., மோடி… இல்லாவிட்டால் கோயில் சாத்யமில்லை… அந்த சில நிமிட உணர்ச்சிப் பேச்சில் அடிக்கடி அவர் சொன்ன வார்த்தைகள். அட்சதையை வாங்கித் தமக்கே சேர்த்துக் கொண்டார். நானும் உடன் வந்த மருமான் முகுந்தனும் நமஸ்காரம் செய்தபோது, ஆசீர்வாத மந்திரம் சொல்லி அட்சதையை சேர்த்தார். கும்பாபிஷேகத்தன்று அயோத்தி ராமனை மனசால் தியானிப்பேன், இங்கிருந்தபடியே வேத மந்திரங்களைச் சொல்வேன் என்று குதூகலித்தார்.
இன்னொருவர் அருகே வசிக்கும் ரகுநாதன் ஸ்வாமி. நெய்வேலியில் ராஜாஜி அமைப்பு வைத்து நடத்தியவர். வைணவ சம்ப்ரதாய நூல்களை கவிநடையில் எழுதியவர். எழுதிக் கொண்டிருக்கிறார். அடுத்து நான் வசிக்கும் அபார்ட்மெண்டில் சிலர். அவர்களில் ராமநாதன் மாமா. படு ஆர்வத்துடன் வாங்கிக் கொண்டார். ஸ்வாமி சந்நிதியின் முன் நின்று பக்தி சிரத்தையுடன். அடுத்த மாதம் காசி, அயோத்யா விமான டிக்கெட் போட்டிருக்கிறாராம். அயோத்தி ராமர்தான் நெஞ்சில் நிறைந்திருக்கிறார்!
திரு ராஜூவுக்கு போன் செய்தேன். அடடே என்ற ஆச்சரியத்துடன் தற்காலிகமாக வேறு இடத்துக்குக் குடிபெயர்ந்திருப்பவர் தன் மனைவியுடன் பிளாட்டைப் பார்க்க வந்த நேரத்தில் பழங்கள் சகிதமாக ஸ்வாமிக்கு அர்ப்பணம் செய்துவிட்டு, தம்பதியாக அந்த அட்சதையைப் பெற்றுக் கொண்டார்கள்.
இன்னும் அசோக் என்னும் இளைஞர். அருப்புக்கோட்டை சொந்த ஊர். அருமையான பாகவத கோஷ்டி. இவரின் தாயார், ப்ரபந்தங்களை கோஷ்டியாக இருந்து சொவதற்காகவே இந்த மார்கழியை சொந்த ஊரில் இருந்து கழித்திருக்கிறார். இப்படியாக, ஸ்ரீராமனின் அட்சதைப் பிரசாத விநியோகம் இன்னும் தொடரும்…