பலிதானம் தரவென்றே பிறந்த
பாவப்பட்ட உயிர்களா நாம்
நம் ஆன்மிக மென் சதைகள் எல்லாம்
கூர் மத நகங்கள் குத்திக் கிழிக்கத்தானா
நம் உயர் தத்துவங்களின் இதமான தோல்கள் எல்லாம்
அரசியல் கோரைப் பற்கள் பிய்த்து எறியத்தானா
என்று நமக்குப் புரியும்
நம் சகிப்புத்தன்மையின் கால்கள்
சுற்றி வளைக்கும் தந்திரங்களிடமிருந்து
தப்பிக்கப் போதுமானவையல்ல என்பது
என்று நமக்குத் தெரியவரும்
நம் பன்மைத்துவத்தின் மிருதுவான எலும்புகள்
ஒற்றைப்படைகளின் முறுக்கல்களால்
எளிதில் நொறுங்கக்கூடியவை என்பது
ஜாதிப் பற்றின் பசும் புல்லையும்
ஆன்மிக சுதந்தரத்தின் தளிரிலைகளையும்
பெருந்தன்மையின் உதிர் கனிகளையும் உண்டு
யாம் உருவாக்கிய இன்னுடல்
இதுவாகவா இருக்கவேண்டும்
நம் நிலத்து நீரோடைகளைக் கடந்து செல்லும்
பகலின் குளிர் காற்றுகள்
அதன் புதர் மறைவுக்கு அழைத்து வந்துவிடுகிறது
அனைத்து வேட்டைக் கண்களையும்
மரணச் சரிவின் வழி இறங்கி ஏறியே தணிக்கமுடிகிறது
நம் ஒவ்வொரு நாளின் எளிய தாகத்தைக்கூட
மையம் அழிந்த திறந்தெவெளியில்
ஒற்றுமையின்மையின் இருளில்
படுத்துறங்கும் வரையில்
முடிவற்று நீளும் நம் இரவுகள் பாதுகாப்பற்றவையே
நமக்குள் முட்டி மோதிக்கொள்ள மட்டுமே
நாம் இப்போது பயன்படுத்தும்
தற்காப்புக் கொம்புகளின்
நிஜப் பயனைப் புரிந்துகொண்டாகவேண்டும்
கூர் தீட்டிக்கொள்ளச் சொல்லும் கற் பாறைகளை
குளம்புகளால் உடைத்துப் போடும் மடத்தனம் புரிந்தாகவேண்டும்
இனியும் தொடரக்கூடாது
நம் பலிதானம்
கானகத் தாயின்
ஆதிக் குழந்தைகள் நாம்
ரத்தம் சிந்துதல் தவிர்க்க முடியாதது என்றால்
அவள் காலடியில் சிந்த வேண்டியது
இனி நம் ரத்தமல்ல.
- பி.ஆர்.மகாதேவன்