தைரியம் என்பது பயத்தை எதிர் கொள்ளுதலும், கட்டுபடுத்துவதும் ஆகும். பயமே இல்லாமல் இருப்பது அல்ல!
அலெக்சாண்டர் ஒரு கடல் கொள்ளைக்காரனைப் பிடித்து விசாரிக்கிறார்.,
”எந்த தைரியத்தில் நீ கடலில் கொள்ளை அடித்தாய்?”
கொள்ளையன் சொன்னான்,’நாடு பிடிக்கத் தங்களுக்கு எந்த தைரியம் காரணமோ ,அதே தைரியம் தான்.”
ஆமாம்..,தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர்.
ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம். வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்!
சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா? என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர்.
திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது..
பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளை இட்டார். காவலர்கள்
அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்தப் பிச்சைக்காரனைத் தூக்கில் போடுமாறு தண்டனையும் கொடுத்தார்.
பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான்.
சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக் கடங்காமல் போய் விட்டது…
பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.
அரசே! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே…அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான்.
மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்த மன்னன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.
ஆம்..,நண்பர்களே..,
என்ன நடந்தாலும் தைரியமாக இருங்கள், ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள்,
அவற்றை எதிர் கொள்ளுங்கள். ஏனெனில் அனுபவத்துக்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை.