சீர்காழி அருகே உள்ள மணல் அகரத்தை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம். இவருக்கு வயது 31. கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் காலேஜில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவரும், அதே காலேஜில் படித்த ஒரு மாணவியும் காதலித்து வந்தனர்.
அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, கடந்த மாதம் 30-ந்தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. காதலிக்கு விரைவில் திருமணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் ஆத்திரம் கொண்டார்.
அதனால் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து, பெண்ணை பற்றி தப்பு தப்பாக அவதூறுகளை கூறினார். காதலித்தபோது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைபடத்தையும் மாப்பிள்ளையின் செல்போனுக்கு அனுப்பி வைத்தார்.
இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர். இதில் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து அருந்தி விட்டார். இதனையடுத்து அவர் மயங்கி விழுந்ததை கண்ட குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு பெண்ணை குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பெண்ணின் தந்தை சிவஞானசம்பந்தத்தை சந்தித்து இதை பற்றி கேட்டதற்கு, “உன் மகளை வேறு யாருக்காவது திருமணம் செய்துக் கொடுத்தால் கொலை செய்து விடுவேன்” என்று மிரட்டி உள்ளார். இந்த கொலை மிரட்டல் குறித்து பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி காவல்துறையில் புகார் செய்யவும், அதன்பேரில் சிவஞானசம்பந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.