ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாள் நாளை மற்றும் அதற்கு மறுநாள் கொண்டாடப்பட இருப்பதை ஒட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வ்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளை கொண்டாட உள்ள தமிழக மக்களுக்கு,
நவராத்திரி எனப்படும் ஒன்பது திருநாட்களில் இறுதியில் ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமித் திருநாளைக் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த இனிய ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துக்களை அன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்.
உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்து செய்யும் தொழிலை தெய்வமென மதித்து அன்னை பராசக்தியின் அருளை வேண்டி தொழில் சார்ந்த கருவிகளை தெய்வத்தின் திருவடிகளில் வைத்து வழங்கும் நாள் ஆயுத பூஜை திருநாளாகும்.
அழிவு இல்லாத சிறந்த கல்விச் செல்வத்தை வழங்குகின்ற கலைமகளையும் மனத்திடத்தோடு துணிவைத் தரும் மலைமகளையும் செல்வங்களை அள்ளித்தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பு.
அயராத உழைப்பினால் கிட்டும் வெற்றியினை பூஜிக்கும் திருநாளாகவும் விஜயதசமி நாளில் ஆரம்பிக்கும் அத்தனை காரியங்களும் வெற்றியில் முடியும் என்ற நம்பிக்கையையிலும் மக்கள் அனைவரும் அன்னை மகா சக்தியை வழிப்பட்டு நற்காரியங்களைத் தொடங்கும் வெற்றி திருநாளாகவும் விஜயதசமி திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி திருநாளில் அன்னையின் அருளால் தமிழக மக்கள் அனைவரும், அனைத்து நலன்களையும் வளங்களையும் பெற்று, சீரோடும் சிறப்போடும் வாழ்ந்திட எங்களது உளமார்ந்த வாழ்த்துக்கள் ” என்று கூறியுள்ளனர்.
மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம், மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் 'ஆயுத பூஜை' மற்றும் 'விஜயதசமி' வாழ்த்து செய்தி. pic.twitter.com/ZXrMw0GKTn
— AIADMK (@AIADMKOfficial) October 6, 2019