அரசு மருத்துவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஊதிய உயர்வு உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு மருத்துவர்கள் கடந்த மாதம் 25 ஆம் தேதியிலிருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறும், பணிக்கு திரும்பாத அரசு மருத்துவர்களின் இடங்களை காலி இடங்களாக அறிவிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இவரை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் மருத்துவர்கள் பணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். இந்நிலையில் முதல்வர் மற்றும் அமைச்சர் பழனிசாமியின் வேண்டுகோளை ஏற்று அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்றுடன் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமி நாராயணன் என்பவர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் ஏற்கனவே அவசர சிகிச்சைகள் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில சிகிச்சைகள் நாள்பட அவசர சிகிச்சைகளாக மாறும் அபாயம் இருப்பதாலும், புயல் காரணமாக காய்ச்சல் பரவி வரும் சூழல் காரணமாகவும், முதலமைச்சர் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும், மீண்டும் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையிலும், எங்களுடைய இயக்குனர் கொடுத்த வேண்டுகோள் அடிப்படையிலும், ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்
ஆனால் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளதாகவும், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதில் தயவு செய்து தங்களுடைய கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விரைவில் கூட இருக்கும் தமிழக அமைச்சரவையில் எங்களது கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று நம்புகிறோம் என்றும், எங்களுடைய அனைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவு செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாகவும் லட்சுமி நரசிம்மன் மேலும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி போராட்டம் வாபஸ் பெற்ற பிறகு பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் என்று தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், போராட்டம் செய்த மருத்துவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.