தங்கள் அமைப்பை சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்ததால் எஸ்ஐ வில்சனை கொலை செய்ததாக கர்நாடகாவில் கைது செய்யப்பட்ட தவ்ஃபீக் மற்றும் சமீன் காவல்துறையில் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் ஜன. 8 ஆம் தேதி காவல் பணியில் இருந்தார் சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன்! அவர் ஆயுதக் கடத்தல் தொடர்பாக சந்தேகம் ஏற்பட்டு இஸ்லாமியர் இருவரை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாயின.
தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற இடத்தின் சிசிடிவி காட்சிகள் போடப்பட்டு அலசி ஆராயப் பட்டது. அப்போது, தொப்பி அணிந்த இருவர் அந்த இடத்தில் இருந்து வேகமாக ஓடி, அருகில் இருந்த மசூதிக்குள் நுழைந்தது தெரியவந்தது.
இதை அடுத்து, அவர்கள் இருவர் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸாருக்கு, அவர்கள் இருவரும் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த அப்துல் சமீம் (32), கோட்டார் இளங்கடையைச் சேர்ந்த தவ்பீக் (28) என்பது தெரிந்தது.
மேலும், இந்த இருவர் குறித்தும் தீவிர விசாரணை செய்ததில், தப்பி ஓடிய இருவருக்கும் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு இருந்ததாகவும், இருவரும் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இதை அடுத்து நிலைமையின் விபரீதம் அறிந்த போலீஸார், தப்பி ஓடிய இருவரையும் பிடிக்க 13 தனிப்படைகள் அமைத்து தேடினர். கேரள மாநில போலீஸ் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசினர்.
இந்நிலையில், ஜன.14ஆம் தேதி கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையத்தில் வைத்து இருவரையும் கர்நாடக மாநில போலீஸார் கைது செய்தனர். அவர்கள் இருவரும் அங்கிருந்து மங்களூரு வந்து, மங்களூரில் இருந்து நேபாளம் வழியாக தப்பிச் செல்ல தீர்மானித்திருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து தமிழக போலீஸார் வசம் ஒப்படைக்கப்பட்ட இருவரிடமும் தமிழக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பகீர் தகவல்கள் சில கிடைத்து, போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்தது.
எஸ்பி ஸ்ரீநாத் தலைமையிலான தனிப்படையினர், கியூ பிரிவு மற்றும் தீவிரவாத தடுப்பு படையினர் ஆகியோர் விடிய விடிய விசாரித்தபோது இருவரும் தமிழ்நாடு நேஷனல் லீக் இயக்கத்தைச்சேர்ந்தவர்கள் என்றும், ஐஎஸ் ஐஎஸ் இயக்கத்துடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாகவும் கூறினராம்.
நாட்டில் பெரும் சதிவேலைக்கு அவர்கள் திட்டமிட்டதாக தெரியவந்தது. கன்னியாகுமரி மாவட்ட போலீஸார் அவர்கள் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பின்னர், அவர்கள் இன்று அதிகாலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டு வரப்பட்டனர்.களியக்காவிளை போலீஸாரைத் தொடர்ந்து தக்கலை போலீஸார் விசாரணை நடத்தினர்.
சமீம், தௌபீக் இருவரும் கியூபிரிவு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், தங்களது அமைப்பை சேர்ந்தவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்ததால் எஸ்.ஐ .வில்சனை சுட்டுக் கொன்றதாகவும், தங்களையும் போலீஸ் சுட்டு கொன்றுவிடுவார்கள் என்பதால் அவ்வாறு செய்ததாகவும் கூறினராம்.
அதாவது, தங்களது இயக்கத்தினர் மற்றும் அல்உம்மா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகளை சேர்ந்த பலரையும் தேசிய புலனாய்வு துறை கைது செய்து வருவதால், எஸ் எஸ் ஐ யை சுட்டுகொன்றோம் என்று கூறியுள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா, அல்லது ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டதைக் கண்ட, அல்லது வேறு ஏதோ விபரீதத்தைக் கண்டதால் அதிர்ச்சி அடைந்த வில்சன், இவர்களைத் தடுத்து விசாரணை செய்தாரா, அப்போது இவர்கள் துப்பாக்கியால் சுட்டார்களா? வில்சன் அதிர்ச்சி அடையக் காரணம் என்ன? தப்பித்து ஓடியவர்கள் ஏன் மசூதியில் அடைக்கலாம் புகுந்தனர்? அவர்களுக்கும் இதில் பங்கு உண்டா? விசாரணையை திசை திருப்ப இது போல், எதற்கோ பழிவாங்க வில்சனைக் கொன்றதாக அவர்கள் கூறுகின்றனரா என்றெல்லாம் கேள்விகள் எழுந்துள்ளன.
இதனிடையே, விசாரணைக்குப்பின் இரு ஐஎஸ்., தொடர்பு பயங்கரவாதிகளும் தக்கலை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டனர். நண்பகலில் அவர்களை நீதிபதி முன் ஆஜர் படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர். பின்னர் முறைப்படி காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.