மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த சிறு வியாபாரிகள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதால், பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் அச்சத்தில் தவிக்கும் மதுரையில் இப்படி ஒன்றாகக் குவிந்து, எந்தக் காரணத்துக்காக சமூக விலகலைக் கடைப்பிடிக்கச் சொன்னார்களோ அதற்காகவே மீறி மக்கள் குவிந்ததால் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று காலை சிறு வியாபாரிகள் சூழ்ந்து கொண்டனர். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், மதுரை மாவட்டத்தை கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் கட்டுப் படுத்த போலீஸாரும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இதனால், மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த சனிக்கிழமை நாளை முதல் இரு சக்கர வாகனங்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருட்கள் விற்பணை செய்வோர் அணைவரும் அனுமதி அட்டை இருந்தால் தான் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவர் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதை அடுத்து வெள்ளிக்கிழமை இன்று காலை ஐநூறுக்கும் மேற்பட்ட சிறு தொழில் செய்வோர் அனுமதி அட்டையை பெற, மதுரை மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்குக்கு படையெடுத்தனர். இதனால் கூட்டம் மிகுந்து சலசலப்பு அதிகம் ஏற்பட்டது.
இதனால் அட்டை வழங்கும் திட்டம் தள்ளிப்போகுமா எனத் தெரிகிறது. இத் திட்டம் அமல்படுத்தப்பட்டால் கிராமங்களில் சில்லறை விற்பனை செய்யும் வியாபாரிகள் பாதிக்கப் படுவார்கள் என பால் வியாபாரி அய்யனார் நம்மிடம் தெரிவித்தார்.
மேலும், மதுரை நகரில் பல தெருக்களில் மாஸ்க் அணியாமல் நடமாடும் மக்களையும் .தெருக்களில் கிரிக்கெட் விளையாடும் நபர்களையும் கட்டுப்படுத்தினாலே கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று சமூக ஆர்வலர்கள் பெரும் கவலையுடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக, மதுரையில் 25ம் தேதி, நாளை முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மதுரையில் 25ம் தேதி முதல் QR code அட்டை பெற்ற வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட உள்ளது. இதனையடுத்து மற்ற வாகனங்களில் வந்தால் பறிமுதல் செய்யப்படும் என்றும், இது குறித்து தகவல் அறிய 1077, 0452-2547160, 9597176061 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.
- செய்தியாளர்: ரவிசந்திரன், மதுரை