அமெரிக்காவில் கொரோனா பாதித்து மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் முகத்தில் புன்னகையை வரவழைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால் அதனை இந்தியச் சிறுமி ஒரு சேவையாகவே செய்து வருகிறார்.
15 வயதில் விளையாடிக் கொண்டு தனது பொழுதைப் போக்காமல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு குறிப்பாக வயதான மூத்தக் குடிமக்களுக்கு பரிசுப் பொருட்களையும், அன்பு மடல்களையும் அனுப்பி அவர்களது முகத்தில் புன்னகையை ஏற்படுத்தி வருகிறார் இந்திய வம்சாளியைச் சேர்ந்த அமெரிக்கச் சிறுமி.
பள்ளிச் சிறுமியான ஹிதா குப்தா, அன்பு, மகிழ்ச்சி, நம்பிக்கையை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய மடல்களை அமெரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் முதியவர்களுக்கு நாள்தோறும் அனுப்பி வருகிறார்.
கைப்பட எழுதிய மடல்களுடன், ஒரு பரிசுப் பொருளையும் இணைத்து அனுப்புகிறார். பரிசு என்றால் ‘கதைப் புத்தகங்கள், வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கலர் பென்சில் போன்றவற்றைத்தான் இணைத்து அனுப்புகிறேன்’ என்கிறார் குழந்தைத் தனம் மாறாமல்.
இந்த திட்டம் எப்படி உருவானது என்று கேட்டபோது, நெருங்கிய உறவுகளைப் பார்க்காமல் அவர்கள் சிகிச்சையின் போது எந்த அளவுக்கு மன வேதனைப்படுவார்கள் என்று நினைத்துப் பார்த்தேன். அப்போதுதான் இந்த யோசனை வந்தது.
16 மருத்துவமனைகளுக்கு தினந்தோறும் இதுபோன்ற பரிசுப் பொருட்களை அனுப்பி வருகிறேன். நானும் எனது சகோதரரும் கைப்பட இந்த மடல்களை எழுதுகிறோம் என்கிறார் மகிழ்ச்சியோடு.