சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அந்தப் புகாரில் கூறியிருப்பதாவது, `நானும் தேனாம்பேட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரனும் (29) காதலித்தோம்.
ராமச்சந்திரன் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவருகிறார். காதலிக்கும்போது இருவரும் பல இடங்களுக்குச் சென்றுள்ளோம். அப்போது இருவரும் சேர்ந்து செல்ஃபி மற்றும் போட்டோஸ் எடுத்துள்ளோம். என்னைத் திருமணம் செய்துகொள்வதாக ராமச்சந்திரன் ஆசைவார்த்தை கூறினார். அதை நம்பி அவருடன் நெருங்கிப் பழகினேன்.
கடந்த சில மாதங்களாக ராமச்சந்திரன், என்னுடன் பேசுவதைத் தவிர்த்து வருகிறார். அதுகுறித்து அவரிடம் கேட்டபோது எனக்குத் திருமணமாகி விட்டது. அதனால் இருவரும் பிரிந்துவிடுவோம் என்று கூறினார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
இந்த நிலையில், அவரும் நானும் எடுத்துக்கொண்ட போட்டோஸ், வீடியோக்களை சமூகவலைதளத்தில் பதிவு செய்துவிட்டார். என்னை ஏமாற்றிய ராமசந்திரன் மீது நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ஜெயலட்சுமி உத்தரவின்பேரில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர்.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிடம் போலீஸார் விசாரித்தபோது அவர் கூறிய தகவல் போலீஸாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண் போலீஸாரிடம் கூறுகையில், `ராமச்சந்திரனும் நானும் முதலில் நட்பாகத்தான் பழகினோம். அப்போது ஒருநாள் அவர் என்னிடம் காதலைக் கூறினார். உடனே நான், அவருடன் பழகுவதை நிறுத்தினேன். ஆனாலும் ராமச்சந்திரன் என்னை விடாமல் துரத்தித் துரத்தி காதலித்து என் மனதை மாற்றிவிட்டார்.
நாங்கள் காதலித்தபோதுகூட அவருக்கு திருமணம் நடந்ததை என்னிடம் மறைத்துவிட்டார். 2-வதாக திருமணம் செய்து கொள்ளும்படி அவரை நான் வற்புறுத்திய போது தான் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டினார்.
அதன்பிறகும் அவரை திருமணம் செய்து கொள்ளும்படி கூறியதால் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு விட்டார். அதோடு எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தார்.
இப்படி என்னை பிளாக்மெயில் செய்தால் அவரை விட்டு பிரிந்து சென்று விடுவேன் எனக் கருதுகிறார். என்னை ஏமாற்றிய ராமச்சந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்னைப் போல எந்தப் பெண்ணும் ராமச்சந்திரனால் பாதிக்கப்படக் கூடாது. அவர் என்னை ஏமாற்றியதைப் போல இன்னும் சில பெண்களை ஏமாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது’ என்றார்.
இளம்பெண் அளித்த தகவலின்படி ராமச்சந்திரனை தேடி அவரின் வீட்டுக்கு போலீஸார் சென்றபோது அங்கு அவர் இல்லை. அவரின் செல்போன் நம்பரும் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக அவர் வேலைக்கும் செல்லவில்லை. அதனால் ராமசந்திரனை போலீஸார் தேடிவருகின்றனர். சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இளம்பெண்ணின் அந்தரங்க வீடியோக்கள், புகைப்படங்களை நீக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.