தினகரன் அணியைச் சேர்ந்த 3 எம்.பி.க்கள் நேற்று திடீரென முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். மேலும், இரட்டை இலை எங்கு இருக்கிறதோ அங்கேதான் நாங்கள் இருப்போம் என்றார், அவர்களில் ஒருவரான விஜிலா சத்யானந்த்.
இந்நிலையில், திருச்சியில் இது குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், பயத்தின் காரணமாக 3 எம்பிக்களும் என்னிடம் சொல்லிவிட்டுத்தான் முதலமைச்சர் அணிக்குச் சென்றனர் என்று கூறினார்.
மேலும், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் எனது பழைய நண்பர்கள்; தற்போதும் நண்பர்களாகவே கருதுகிறேன் என்று கூறிய தினகரன், இரட்டை இலை சின்னம் தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளேன் என்றார்.
ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட மீண்டும் தொப்பி சின்னத்தை கேட்போம் என்றும், ஆர்.கே.நகர் தேர்தல் முடியும் வரை வருமானவரி சோதனை தொடரும் என்றும் கூறினார். மேலும், தனக்கு தனி கட்சி தொடங்கும் திட்டம் கிடையாது என்றும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று அதிமுகவை மீட்போம் என்றும் கூறினார் தினகரன்.