பழம்பெரும் திரைப்பட நடிகை வாணிஸ்ரீ. இவர் நடிகையாக இருக்கும்போதே வாணி என்டர்பிரைசஸ் என்ற பெயரில் கார் பேட்டரி தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார்.
இந்த நிறுவனத்துக்காக சென்னை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் ரூ.6 கோடி மதிப்புள்ள நிலம் 1970-ல் வாங்கப்பட்டுள்ளது. இதை சிலர் அபகரித்துவிட்டதாக நடிகை வாணிஸ்ரீ தரப்பில் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து உரிய விசாரணை நடத்த காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் ராஜாபால் தலைமையிலான தனிப்படை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து இந்த மோசடி தொடர்பாக அமைந்தகரை, ஆசாத் நகரை சேர்ந்த தமீம் அன்சாரி (43) என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.