சென்னை :
வரலாற்றுப் பெருமை கொண்ட சென்னை பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. இதனை சமாளிக்க அரசு கல்லூரிகள் மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களிடம் சான்றிதழ் பாதுகாப்பு கட்டணத்தை 10 மடங்கு உயர்த்தியுள்ளது . மேலும் இப்படியே நிதி நெருக்கடி தொடர்ந்தால் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழகம் 1857ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 5 குடியரசுத் தலைவர்களை உருவாக்கிய ஒரே பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றது சென்னை பல்கலைக்கழகம். சிறப்பு பல பெற்ற இந்தப் பல்கலைக் கழகம், வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளது.
இதற்குக் காரணம் சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டது தான் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் அரசுக் கல்லூரிகள் (15) மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் (30) மேலும் சுயநிதி கல்லூரிகள் (115) என 150க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் செயல்படடு வருகின்றன. இதில் பயிலும் 1500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் பாதுகாப்பு கட்டணமாக, அரசுக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000-ம், அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.2000 கட்டணமாக வசூலிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது
ஏற்கெனவே இந்தக் கட்டணம் 250 ரூபாயாக இருந்தது. இப்போது, மேலும் பேரிடியாக இந்தக் கட்டணத்தை சென்னை பல்கலைக்கழக நிர்வாகம் பல மடங்கு உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வால் ஏழை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். தொலைதூர கல்வி நிலையங்கள் மூடப்பட்டதால் சென்னை பல்கலைக்கழகத்தின் வருமானம் குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.