சென்னை:
இன்று பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு கேட்கப் பட்ட தமிழ் முதல் தாள் மிகவும் எளிமையாக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. தேர்வுகள் அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களில் முதல் நாள் தேர்வு நடக்கிறது.
முதல் நாள் தேர்வு இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் 10 நிமிடம் வினாத்தாள்களைப் படித்துப் பார்க்கவும், அடுத்த 5 நிமிடம் விடைத்தாளில் உள்ள விவரங்களை சரிபார்க்கவும் அனுமதிக்கப்பட்டது. இதை அடுத்து 10.15 முதல் மதியம் 1.15 மணி வரை தேர்வு நடைபெற்றது.
இன்று தமிழ் முதல் தாள் தேர்வு முடிவடைந்ததும் கேள்வித் தாள் எளிமையாக இருந்ததாக மாணவ மாணவிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கக் கூடிய வகையில் எளிதாக இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
தேர்வு மைய வளாகத்துக்குள் செல்போன் எடுத்து வருதல் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு நேரங்களில் ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் குற்றமாகக் கருதப்படும். அதற்கு உடந்தையாகவோ, ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் ஈடுபட்டால் பள்ளி அங்கீகாரம் மற்றும் தேர்வு மையம் ரத்து செய்யப்படும். மாணவர்கள் காப்பி அடித்தல், பிட் அடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடுவதைத் தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.