சேலம் : மரத்தை வெட்டியதாக போத்தீஸ் நிறுவனத்தை மிரட்டி 7 லட்சம் ரூபாய் பணம் பறித்ததாகக் கூறி ‘சமூக சேவகர்’ பியூஸ் மனுஷ் மீது வழக்கறிஞர் மணிகண்டன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளார்.
இது குறித்து தேசிய மக்கள் இயக்கம் அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருப்பதாவது…
சேலத்தில் போத்தீஸ் துணி கடை அண்மையில் திறக்கப் பட்டது. அந்த நிறுவனத்தினர் கடைக்கு முன் இருந்த மரங்களை அரசின் முன் அனுமதி பெறாமல் வெட்டினர்.. இதை அறிந்த மாவட்ட நிர்வாகம், உடனடியாக தொடர்புடைய நிறுவனத்தார் மீது புகார் பதிவு செய்ய்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில் சேலத்தில் குடியிருந்துவரும் ராஜஸ்தானைச் சேர்ந்த பியூஸ் மானுஷ் என்ற நபர், இந்த இடத்துக்குச் சென்று மரம் வெட்டுவதை வீடியோ எடுத்து, அநியாயம் அக்கிரமம் நடக்கிறது, போத்தீஸ் நிறுவனம் பெரிய பெரிய மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டது. அயோக்கியர்களை விடமாட்டேன் என குரல் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்.
பின்னர் அந்த நிறுவனத்தை மிரட்டி, இவர் நடத்தி வரும் சேலமே குரல் கொடு அமைப்புக்கு மரம் வளர்ப்பதற்காக, ரூ.7 லட்சம் நன்கொடை பெற்றுள்ளார். இப்படி நன்கொடை என்ற பெயரில் தன் சமூக விரோதச் செயல்களுக்கு நிதி சேர்த்துள்ளார் பியூஷ் மானுஷ்.
இவர் சேலம் விமான நிலைய விரிவாக்கத்துக்கு எதிராக அப்பாவி விவசாயிகளைத் தூண்டி கலவரம் ஏற்படுத்தி வருகிறார். சேலம் சென்னை 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை சீர்குலைக்க போராட்டம் செய்ய கூலிக்கு ஆள் தேவை, மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு ஆட்களைத் திரட்டி வருகிறார். இதற்காக இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சமூக விரோதச் செயல்களுக்கு பயன்படுத்தி வரும் இவரது பராமரிப்பில் உள்ள மூர்கனேரி, குமரகிரி ஏரி அகியவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கையகப் படுத்த வேண்டும்…- என்று கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.