சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு சிகிசையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்கும் அவர் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், காவேரி மருத்துவமனை வாசலில் தொண்டர்கள் அணி திரண்டு காத்திருக்கின்றனர். தமிழக திராவிட அரசியலின் முக்கிய ஆளுமை என்பதால், கருணாநிதி குறித்த செய்திகளை சேகரிக்க இரவு பகலாக கண் துஞ்சாமல் காவேரி மருத்துவமனை வாசலில் ஊடகத்தினர் காத்துக் கிடக்கின்றனர்.
இந்நிலையில், சரியான வகையில் உணவும் தண்ணீரும் கிடைக்காமல் தொண்டர்களும் பத்திரிகையாளர்களும் அவதிப் பட்டு வருகின்றனர். இது குறித்து செய்திகள் வெளியாயின.
இந்நிலையில், திமுக. தொண்டர்களின் சோர்வைப் போக்க வேண்டும் என்று திமுக., பிரமுகர் ஒருவர் டிவிட்டர் பதிவில் வேண்டுகோள் விடுத்தார்…. “திமுக., காவிரி மருத்துவமனை முன்பு குவிந்துள்ள கழக தொண்டர்களுக்கு உணவு பொட்டலம் & குடிநீர் பாட்டில்களை கழக சென்னை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் ஏற்பாடு செய்யலாமே.. #வேண்டுகோள் அண்ணன்கள் @JAnbazhagan @Subramanian_ma @PKSekarbabu @SUDHARSANAM_S மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்..”
இதைப் படித்த திமுக.,வின் ஜே.அன்பழகன் “உங்கள் யோசனைக்கு நன்றி, நாளை முதல் கழகத் தோழர்களுக்கும், செய்தியாளர்களுக்கும் உணவு, குடிநீர் பாட்டில்கள் வழங்கப்படும்.” என்று அறிவித்தார்.
இதை அடுத்து, நேற்று பத்திரிகையாளர்கள், தொண்டர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப் பட்டது. இதை தனது டிவிட்டர் பதிவில் பதிவிட்டார் ஜே.அன்பழகன்.
பத்திரிகையாளர்களுக்கு பிரியாணி, கழகத் தோழர்கள் ஆயிரக்கணக்கானோருக்கு மதிய உணவு, 5000 குடிநீர் பாட்டில்கள் சற்று முன் வழங்கப்பட்டது. மேலும் இரவு “Fried Rice” வழங்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன…- என்று பதிவு செய்து, சில புகைப்படங்களையும் வெளியிட்டார்.
தொடர்ந்து, கலைஞரை பார்க்க வருபவர்களுக்கு மனதளவிலே சோகம் இருக்கனும் உடலளவில் சோகம் இருக்க கூடாது என்று நினைத்து உணவு வழங்கிய அண்ணன் @JAnbazhagan அவர்களுக்கு நன்றி என்று டிவிட்கள் பறந்தன.
இதை அடுத்து, இன்று முதல் மூன்று வேளை உணவு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார் ஜே.அன்பழகன்.