சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கவிதாவை ஆதாரமின்றி கைது செய்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் பொன் மாணிக்கவேலை எச்சரித்துள்ளது.
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை செய்ததில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். சிலைத் திருட்டு குறித்து விசாரித்து வரும் பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அவரைக் கைது செய்தனர்.
இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரி கவிதா ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் பொன் மாணிக்கவேல் ஆஜரானார். அவரிடம் இந்து அறநிலையத்துறை துணை ஆணையர் கவிதாவிடம் சம்மன் அனுப்பி விளக்கம் கேட்காமல் நேரடியாக கைது செய்தது ஏன் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த பொன் மாணிக்கவேல், கவிதா முறைகேட்டில் ஈடுபட்டதற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்ததால் அவரை கைது செய்ததாகத் தெரிவித்தார். மேலும் மாஜிஸ்திரேட்டிடம் ஆதாரத்தை காட்டிவிட்டுதான் கவிதாவை கைது செய்ததாக பொன்மாணிக்கவேல் பதிலளித்தார்.
இதையடுத்து கவிதாவை கைது செய்ததற்கான அனைத்து ஆதாரங்களையும் வரும் திங்கள் கிழமை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். தகுந்த ஆதாரம் இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொன் மாணிக்கவேலை நீதிபதிகள் எச்சரித்தனர்.
இந்நிலையில், தான் ஒரு பெண் என்பதால் தனக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என கவிதா சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து திங்கள் கிழமை பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.