கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் முழு இரவு தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் 24ம் தேதி நடைபெற்ற போது நிறவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி கிராம நிர்வாக அலுவலர்களுக்கு இணையதள கணிப்பொறி வசதி , சொந்த மாவட்டத்தில் பணி மாறுதல் பெற அனுமதிக்க வேண்டும், கூடுதல் பொறுப்பூதியம் வழங்க வேண்டும் கிராம நிர்வாக பணிக்கு பட்டாதாரி கல்வி தகுதியை நிர்ணயிக்க வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழு இரவு நேர காத்திருப்பு போராட்டத்தை கரூர் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் மாவட்ட செயலாளர் மங்கையர்கரசி, பொருளாளர் முத்துப்பிரியன் உட்பட 20 கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
முன்னதாக சங்கத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்ட 4கட்ட போராட்டத்தின் அடிப்படையில் ஏற்கனவே நவம்பர் 28 முதல் இணையதள விண்ணப்பங்களை புறக்கணித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று டிசம்பர்5 ம்தேதி இரண்டாம் கட்ட போராட்டமாக முழு இரவு நேர காத்திருப்பு போராட்டத்தை துவக்கியுள்ளனர். நாளை மறுநாள் டிசம்பர்7ம்தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளனர். இறுதிகட்ட போராட்டமாக காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.